பிள்ளைகளை மார்க் எடுக்கும் இயந்திரங்களாக்கி தற்கொலைக்குத் தள்ளும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிராகவும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்காகவும் உங்கள் பிள்ளைக்காக நீங்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த அருண்குமார் (17) என்கிற மாணவர் ஜூலை 5-ம் தேதி விடுதி ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ள மேம்மாம்பட்டை என்கிற கிராமம். இவருடைய தந்தை ஆறுமுகம் ஒரு முந்திரி விவசாயி. அருண்குமார் முதலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து பெற்றோர் அவரை ராசிபுரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

தற்கொலை
படம் : நன்றி தினகரன்
பள்ளியில் நடக்கும் மாதத் தேர்வுகளில் அருண்குமார் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்திருக்கிறார். இந்த ஆண்டு நடந்த மாதத் தேர்வுகள் அனைத்திலும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருக்கிறார். இதற்காக ஆசிரியர்கள் அவரை தொடர்ந்து திட்டியுள்ளனர். இதை அருண்குமார் அடிக்கடி பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த மாதத் தேர்விலும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றதால் ஆசிரியர்கள் கடுமையாக திட்டியுள்ளனர். அவர்கள் ஊதியம் வாங்குவதே மாணவர்களை மிரட்டி மதிப்பெண் வாங்க வைப்பதுதான். அதனால் ஒரு கந்துவட்டிக்காரனுக்குரிய வன்மம் அவர்களிடம் எப்போதுமிருக்கும். குறைந்த மதிப்பெண் என்கிற குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை அனைவருக்கும் முன்பாக அருண்குமாரே முடிவு செய்துவிட்டார். சனிக்கிழமை மாலை விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜன்னலில் துண்டைப் போட்டு தூக்கில் தொங்கிவிட்டார். மதிப்பெண்ணுக்கான இந்த ஓட்டத்தில் அவர் தோற்றுவிட்டார். ஆனால் அவருடன் படித்த மாணவர்கள் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
கடலூர் எங்கே, நாமக்கல் எங்கே? ஆறுமுகம் என்கிற முந்திரி விவசாயி தனது பிள்ளையை இரண்டு மாவட்டங்களைத் தாண்டி உள்ள ஒரு பள்ளியில் போய் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? ஒன்று, பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்யும் நாமக்கல் தான் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தேவையான இயந்திரங்களை போல கேள்வி கேட்காமல் தலையாட்டி வேலை செய்யும் மாணவர்களையும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. தமது பிள்ளைகள் அதிக மார்க் எடுக்கும் இயந்திரங்களாக இருப்பதை தான் பெற்றோர்களும் விரும்புகின்றனர். எனவே நாமக்கல் மாவட்டம் ஏழு மாவட்டங்களைத் தாண்டி இருந்தாலும் கொண்டு போய் சேர்ப்பார்கள். இரண்டாவது, ‘பையனை வீட்டிலேயே வைத்துக்கொண்டு, உள்ளூர் பள்ளிக்கு அனுப்பினால் உள்ளூர் பசங்களோடு சேர்ந்து கெட்டுப்போய் விடுவான், பிறகு நாம் நினைப்பது போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், டாக்டர் ஆவதற்கான மதிப்பெண்களை எடுக்கமாட்டான். எனவே கட்டுக்கோப்பான, கறாரான இது போன்ற ஏதாவது ஒரு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்’ என்று கருதுவதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறைகளில் ஏதாவது ஒன்றில் தள்ளி விடுகின்றனர்.
இந்த ‘தற்கொலை’ செய்தியை பெட்டி செய்தி போல வெளியிட்டிருக்கும் அனைத்து பத்திரிகைகளும் மாணவனின் பெயர், வயது, மாவட்டம், தாலுக்கா, கிராமம், மற்றும் பெற்றோரின் பெயர் அனைத்தையும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளன. ஆனால் பள்ளியின் பெயரை திட்டமிட்டு மூடி மறைத்துள்ளன. கல்விக் கொள்ளையர்களுக்கு உதவுவதுதான் நடுநிலை நாளேடுகளின் இலட்சணம் போல.
அருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, SRV Boys Higher Secondary School. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் திருச்சி மாவட்டம் சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பள்ளிகள் தனித்தனியே தான் உள்ளன. ராசிபுரம் பள்ளியில் அருண்குமார் தற்கொலை செய்துகொண்டதை போல கடந்த ஆண்டு பெண்கள் பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சமச்சீர் கல்வி அரசாணை வந்த பிறகும் தனியார் பள்ளிகள் மோசடியாகவும், ஏமாற்றும் நோக்கத்துடனும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்கிற பெயர்களை பயன்படுத்தி கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. அந்த கட்டணம், இந்த கட்டணம், அதற்கு கட்டணம் இதற்கு கட்டணம் என்று பெற்றோர்களை கொள்ளையடிப்பதை தான் இவர்கள் முழு நேர தொழிலாகவே செய்கின்றனர். பெற்றோர்களும் எவ்வளவு அவமானப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அங்கே தான் போய் நிற்கின்றனர்.
இந்த பள்ளிகளில் படித்தால் அதிகமதிப்பெண் பெற்று உயர்கல்வி போட்டியில் வெல்லலாம் என்று மனப்பால் குடிக்கும் பெற்றோர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளட்டும். யாருக்கும் கிடைக்காத வேலைக்குரிய திறமை கூட இங்கே மதிப்பெண் கறக்கும் வித்தையாக இருப்பதோடு, வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியமும், போராட்டமும் இங்கே அழிக்கப்படுகிறதே, இதை விட என்ன இழப்பு வேண்டும்?
அருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் தான் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு இப்போது ஆப்படித்துக்கொண்டிருக்கிறது. ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’, ‘மனித உரிமைப் பாதுகாப்பு மையமும்’ இணைந்து கடலூர் மாவட்டத்தில் கல்விக்கொள்ளையர்களின் கொட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றன. அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அதன் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. இந்த அமைப்புகளின் அதிரடி நடவடிக்கையால் கல்வித்தர வரிசையில் தருமபுரிக்கு முன்னால் இருந்த கடலூர் மாவட்டம் இந்த கல்வியாண்டில் 5 மாவட்டங்களுக்கு முன்னால் சென்றிருக்கிறது. தேர்ச்சி விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.
எனவே பிள்ளைகளை மார்க் எடுக்கும் இயந்திரங்களாக்கி தற்கொலைக்குத் தள்ளும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிராகவும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்காகவும் உங்கள் பிள்ளைக்காக நீங்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்? vinavu.com