செவ்வாய், 1 ஜனவரி, 2013

திருச்சி :ஆசிரியை கல்லால் அடித்து கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள விடத்திலாம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்னக்கிளி (வயது 35). இவர் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் விடத்திலாம் பட்டியில் உள்ளது. நேற்று காலை செந்தில் வேலைக்கு சென்று விட்டார். அன்னக்கிளி தனது தோட்டத்துக்கு சென்றார். மதியம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு சிறுவன் தோட்டத்துக்கு சென்ற போது அங்கு அன்னக்கிளி தலைநசுங்கி மூளை வெளியே வந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்து அலறிய அந்த சிறுவன் அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தான். இதையடுத்து அந்த ஊர் மக்கள் அங்கு ஓடோடி சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அன்னக்கிளியை மணப்பாறை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் திருச்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அன்னக்கிளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அன்னக்கிளி உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தோட்டத்துக்கு சென்ற அன்னக்கிளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு வந்தனர். அங்கு அன்னக்கிளியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி, துணை சூப்பிரண்டு மீனா, இன்ஸ்பெக்டர்கள் கும்மராஜா, அதிவீரராம பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.கொலைநடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி னர். விசாரணையில் தோட்டத்துக்கு சென்ற அன்னக்கிளியை மர்ம நபர்கள் அரளை கல்லால் தலையில் பலமாக தாக்கி உள்ளதும், அவர் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி, மூக்குத்தி என மொத்தம் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் கால் கொலுசும் கொள்ளையடித்து விட்டு கொள்ளையர் தப்பி ஓடியது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றார். விடத்திலாம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக வெளியூரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்து உள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லையாம். அந்த வாலிபர்களுக்கும் அன்னக்கிளி கொலை, கொள்ளைக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். nakkheeran.in/

கருத்துகள் இல்லை: