சனி, 15 மார்ச், 2025

தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் பட்ஜெட் : திமுக கூட்டணி தலைவர்கள் வரவேற்பு!

Tamil Nadu Budget 2025 key features

 மின்னம்பலம் : 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். leaders reaction on tn budget 25-26
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை!
மும்மொழித் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தாலும், இன்றைய நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூபாய் 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2152 கோடி, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்காக ரூபாய் 2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க மறுத்த நிலையில், பள்ளிகளின் செயல்பாட்டிற்கு மாநில அரசின் சொந்த நிதியிலிருந்தே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு முதலமைச்சருக்கு இருக்கிற கொள்கை பற்றை வெளிப்படுத்துகிறது.



அதேபோல, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை பெருக்கி, வாழ்வாதாரத்தை உருவாக்கிடும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 3796 கோடி விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த நிதியை வழங்க மறுப்பதன் மூலம், 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு முடக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதையும் மீறி தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை சொந்த நிதியிலிருந்து நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.

மூத்த குடிமக்களுக்காக ரூபாய் 10 கோடி செலவில் அன்புச்சோலை மையங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடிமைப்பணிகளுக்கான தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் 7000 வீதம் 10 மாத காலத்திற்கு வழங்க நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் அகில இந்திய தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அரசு கல்லூரிகளில் 15000 இடங்கள் கூடுதலாக விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்பட இருக்கிறது. திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை விரிவுபடுத்தி உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறள் வெளியிடும் திட்டத்திற்காக ரூபாய் 133 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு 3500 கோடியில் 1 லட்சம் புதிய லீடுகள் அமைக்கப்பட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி இரண்டு ஆண்டுகளில் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கு காரணமாக பகிரங்கமாக மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிற இக்கட்டான சூழலில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிற வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கிற முயற்சிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்.

அனைத்து மக்களையும் உள்ளடக்கி பயன்பெறுகிற வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முறையாக நிதியை ஒதுக்கியிருக்கிற நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ :

“சமநிலையின்மை என்பது ஒரு வாய்ப்பு. ஆனால் நாம் வேறு பாதையை தேர்வு செய்வோம்” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் “எல்லோருக்கும் எல்லாம்” எனும் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதாக அமைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

ஒன்றிய அரசின் தடைகளை மீறி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி, 2022-2023ஆம் ஆண்டில் 7.61 சதவீதம், 2023-2024இல் 9.19 சதவீதம், 2024-2025இல் 6.48 சதவீதம் என்று இருக்கும் நிலையில், தமிழ்நாடு 2021-2022ஆம் ஆண்டில் இருந்து 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தை எட்டி வருவதாக பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், 2024-2025 நிதியாண்டிலும் 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வரவு செலவு திட்டத்தில் வழிமுறைகள் காணப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும். தமிழ்நாடு, 2023-2024ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9.21 சதவீதம் பங்களித்துள்ளது. மாநில உள்நாட்டு உற்பத்தி தற்போதைய மதிப்பில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.

தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகமாக இருப்பதுடன், தனிநபர் வருமானத்தில் தமிழகம் இந்திய மாநிலங்களில் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. உற்பத்தித் துறையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம் ஆகும்.

தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.
மொத்தம் 35.56 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் தமிழகம் 2023-2024ஆம் ஆண்டில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியால் ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று தமிழகம் அழைக்கப்படுவதாகவும் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன் வழியாக 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் சிறந்த நிர்வாகத் திறனை காட்டுகின்றன.

பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளது சமூக நலனில் அரசு காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. கல்வித்துறை, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு நம்பிக்கை அளிக்கிறது.

மொத்தத்தில் நிதியமைச்சர் குறிப்பிட்டு இருப்பதைப் போல பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறவும், மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோட நிதிநிலை அறிக்கை பாதை அமைத்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
Tamil Nadu Budget 2025 key features
சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் :

தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே அமலாக்கப்படும் சமூக நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவற்கான ஆலோசனைகளும், அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வரவேற்கிறோம்.

நடப்பு நிதியாண்டில் ஐந்து லட்சம் மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் எனும் அறிவிப்பும், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தியிருப்பதும் நல்ல அம்சம். அதேபோல, பெற்றோரை இழந்த மாணவ மாணவியருக்கு பதினெட்டு வயது எட்டும் வரை மாதம் ரூ.2,000/- வழங்கப்படுவது, ஆதரவற்ற முதியோருக்கு “அன்பு சோலை” எனும் பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படுவது, வளரிளம் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் தடுப்பிற்கான தடுப்பு மருந்து திட்டம் ஆகியவையும் நல்ல முன்முயற்சிகளாகும்.

அரசு ஊழியர் – ஆசிரியர்களின் ‘சரண்டர் விடுப்பு பணப்பலன்’ கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்; அதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு அரசின் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை வரவேற்கும் அதே சமயத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்த அறிவிப்போ, அதற்கான நிதி ஒதுக்கீடோ இல்லாமல் உள்ளது.

குறிப்பாக பன்னிரெண்டு லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நாற்பதாயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் எனும் அறிவிப்பு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணிக்கொடை நிலுவை ஆகியவை குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது அந்த பகுதியினரிடையே பெரும் சோர்வை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென பலகட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். அரசிடமும் நேரடியாக முறையிட்டுள்ளனர். இருந்தும்கூட, உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாதது மாற்றுத்திறனாளிகளிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதோடு, நிதி நிலை மீதான விவாதத்திற்கு பிறகேனும் விடுபட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டிற்குரிய நிதி ஒதுக்கீடு, மானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு 3,796 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு தராமல் நிலுவை வைத்திருப்பது போன்ற செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய நிதியை பெற தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: