ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

திருப்பதியின் தமிழ்/தமிழர் தொடர்பு படிப்படியாக மறைகிறது. மறைக்கப்படுகிறது!

May be an image of 1 person, tofu and text

LR Jagadheesan : “கும்பகோணம்” முதல் “திருப்பதி லட்டு” வரை
தெலுங்கு மொழியில் ஏமாற்றுதல், சுத்துமாத்து செய்தல் என்பதற்கு அவர்கள் இன்னமும் பயன்படுத்தும் வார்த்தை “கும்பகோணம்”.  
தெலுங்கில் “கும்பகோணம் சேஸினாடு”  என்றால் (திட்டமிட்டு) ஏமாற்றிவிட்டான் என்றுபொருள்.
தெலுங்கு ஊடகங்களில் கூட அந்தவார்த்தையை இன்றுவரை அந்த அர்த்தத்தில் சகஜமாக பயன்படுத்துகிறார்கள்.
அதற்கொரு வரலாறு இருக்கிறது. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளுங்கள்.
இதோ இப்போது திருப்பதி லட்டுக்கு நெய்யை விற்ற விவகாரத்தில் நம் தமிழ்நாட்டு நெய் வர்த்தகர் மீது திருப்பதி தேவஸ்தானம் பொதுவில் சுமத்தும் குற்றச்சாட்டு உண்மையானால் அது அந்த கடந்தகால “கும்பகோண பெருமைமிகு வரலாற்றில்” இன்னொரு மைல்கல்லை உருவாக்குவதாக அமையும்.



மேலும் அதே திருப்பதியின் புகழ்பெற்ற செம்மரக்கடத்தலில் கூலிகளாக பிடிபட்டு பொதுவெளியில் காட்டப்படும் ஆட்கள் பெரும்பாலும் ஆந்திர எல்லையோர தமிழர்களாக இருக்கும் போக்கு இன்றுவரை நீடிக்கும் பின்னணியில் இந்த “கலப்பட நெய்” விவகாரமும் சேர்கிறது என்பதையும் கணக்கில் வையுங்கள்.
இவற்றின் கூட்டு பின்விளைவுகள் படிப்படியாய் என்னவாய் உருவெடுக்கும் என்பது உங்கள் முடிவு.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் இன்னமும் திருப்பதி லட்டு விவகாரத்தை வைத்து கெக்கே பிக்கே மீம்ஸ் போட்டு சுயதிருப்தி பட்டுக்கொண்டிருக்கும் “Dravidian Stockists”களை நினைத்தால் உண்மையில் பரிதாபமாக இருக்கிறது.

திருப்பதிக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட நெடிய வரலாற்றுத்தொடர்பு இருக்கிறது. அதன் இன்றைய பெருமை, புகழ், வருமானம், செல்வாக்கு உருவானதில் தமிழ்நாட்டு வைணவர்களின் பங்கு பெரும்பங்கு. ராமானுஜர் துவங்கி எம் எஸ் சுப்புலட்சுமி வரை அந்த கோவிலின் வழிபாட்டு முறைகளை வடிவமைத்ததில் அதன் பெருமையை பரப்பியதில் ஆதிக்கம் செலுத்தியவர்கள்  பெரும்பாலும் தமிழ்வைணவர்கள். திருப்பதி பகுதியில் தமிழின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு ஆந்திர வைணவ பிராம்மணர்களின் திருமணங்களில் இன்றும் பாடப்படும் தமிழ்பாடல்களே சாட்சி. திருப்பதி நகரின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் எம் எஸ் சுப்புலட்சுமியின் பென்னாம்பெரிய சிலை மற்றொரு சாட்சி.
மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரம் தனித்துப்போனபின் அது கொஞ்சம் கொஞ்சமாக  திட்டமிட்டு மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து தமிழ்நாட்டு வைணவ பிராம்மணர்கள் தொடர்ந்து எதிர்குரல் கொடுக்கிறார்கள். ஆனால் ப்ரிதாக எடுபடவில்லை. திருப்பதியின் தமிழ்/தமிழர் தொடர்பு படிப்படியாக மறைகிறது. மறைக்கப்படுகிறது.

இந்த பின்னணியில்தான் திருப்பதி லட்டின் புனிதம் கெடுவதற்கு தமிழ்நாட்டு கலப்பட நெய்தான் காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அத்தோடு அந்த “கலப்பட நெய்யை” திருப்பதிக்கு கொடுத்த வர்த்தகர் பழனி கோவில் பதவியில் இருப்பதாக பாஜகவினரும் ஆர்எஸ்எஸ் காரர்களும் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தலட்சணத்தில் தமிழ்நாட்டின் so-called முற்போக்கு முகாம், குறிப்பாக அதன் ஊடகர்கள் (குறிப்பாக திராவிட திம்மிகளும் அம்பேட்காரிய அரைகுறைகளும்) திருப்பதி லட்டு தின்ன ஆசையா என்று கேலிபேசி கெக்கே பிக்கே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ இவர்கள் வழக்கமாக உருட்டும் பிராம்மண எதிர்ப்பின் இன்னொரு பகுதி என்கிற அரைவேக்காட்டுப்புரிதலில் செய்கிற சில்லறைத்தனம்.
மேலும் திருப்பதி கோவிலும் இந்த லட்டுக்கான நெய்ய்யின் கலப்படமும் மாட்டுக்கொழுப்பு விவகாரமும் வெறும் பிராம்மணர்கள் பிரச்சனையல்ல என்கிற அடிப்படை புரிதலே இவர்களுக்கு இன்னமும் உருவாகவில்லை என்பது காலக்கொடுமை.

இந்துத்துவ அரசியலின் தென்னிந்திய நுழைவுக்கான  நீண்ட நெடிய செயற்திட்டத்தில் இது அவர்களுக்கு கிடைத்த “லட்டு”. தெக்கணத்தின் மதசார்பற்ற அரசியலுக்கும் தமிழ்நாட்டு திராவிடத்துக்கும் அவர் வைக்கவிரும்பும் “வேட்டு”. இதில் இந்துத்துவர்கள் இந்திய அளவில் நடத்திக்கொண்டிருக்கும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரத்தை பார்த்தபின்னும் திராவிட திம்மிகள் மற்றவர்களுக்கு “லட்டு” கொடுப்பதாக சுயபகடி செய்துகொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இதுக்கு நீங்க சிரிக்கக்கூடாது சென்றாயன். வெக்கப்படணும்!!

கருத்துகள் இல்லை: