வெள்ளி, 20 செப்டம்பர், 2024

சிவகங்கையில் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை; 5 பேர் கைது:

tamil.indianexpress.com  :  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தாயமங்கலம் செல்லும் சாலையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மானாமதுரை போலீஸார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணும் 24 வயதுடைய இளைஞரும், இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் மானாமதுரை  - தாயமங்கலம் செல்லும் சாலையில்  இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் அந்த இளைஞரை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு அந்த பெண்ணை மிரட்டி அருகிலிருந்த முந்திரிக்காட்டுக்குள் அழைத்துச் சென்றதாகவும், 2 பேர் பாலியல் வன்முறை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து  அலைபேசி மூலம்  அவர்களது நண்பர்கள் 3 பேரை வரவழைத்துள்ளனர். அங்கு வந்த 3 போரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த இளைஞரிடம் செல்போனை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தை மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளனர். அந்த இளைஞர் தனக்கு நடந்த சம்பவத்தை உறவினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பிறகு, அந்த இளைஞர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரிடம் போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து  மானாமதுரை போலீஸார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தி: சக்தி சரவணன் - சிவகங்கை.

கருத்துகள் இல்லை: