சனி, 10 ஆகஸ்ட், 2024

திருகோணேஸ்வரம் கோயிலில் பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளை!

 தமிழ் மிரர் : திருகோணமலை – திருகோணேஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருள் பெறுமதியான பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது.
சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.
இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கிய நிலையில், ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.



பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரன் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்தி வாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுன் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் குறித்து பொதுமக்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆளுநர் இந்த தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: