திங்கள், 18 செப்டம்பர், 2023

மகளிர் உரிமைத் தொகை: இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

minnambalam.com - monisha : மகளிர் உரிமை தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் இன்று (செப்டம்பர் 18) முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
இதனையடுத்து இந்த திட்டம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1 கோடியே 6 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகளுக்கு செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து மாதந்தோறும் 15 ஆம் தேதி வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

இதனிடையே மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின்‌ தகுதிகள்‌ சரிபார்க்கப்பட்டு, அரசாணையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப்‌ பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும்‌, தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள்‌ ஏற்கப்படவில்லை.

விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின்‌ பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு இன்று முதல்‌ அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள்‌ மேல்முறையீடு செய்ய விரும்பினால்‌, குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்‌ இ-சேவை மையம்‌ வழியாக வருவாய்‌ கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்‌. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள்‌ 30 நாட்களுக்குள்‌ தீர்வு செய்யப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

கருத்துகள் இல்லை: