வெள்ளி, 11 டிசம்பர், 2020

வருமான வரி வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு!

 மின்னம்பலம் : வருமான வரித் துறை வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரத்தை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீ நிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை, அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய் என்ற வகையில் 2015ஆம் ஆண்டு விற்பனை செய்தனர்.நில விற்பனை வாயிலாக கிடைத்த, 7.37 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை 2018ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரிக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வருமான மதிப்பீட்டு நடைமுறைகளை இருவரும் முடிக்கும் முன்னரே அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக வாதிட்டார். ஆனால், இருவரையும் வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என வருமான வரித் துறை வலியுறுத்தியது.

வழக்கில் இன்று (டிசம்பர் 11) தீர்ப்பு வழங்கிய நீதிபதி வருமான மதிப்பீட்டு நடைமுறைகளை இருவரும் முடிக்கும் முன்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது நிரூபணமாகியுள்ளதாகக் கூறினார். அத்துடன் வழக்கில் இருந்து கார்த்தி மற்றும் ஸ்ரீநிதியை விடுவித்தும் உத்தரவிட்டார்.

எழில்

கருத்துகள் இல்லை: