திங்கள், 20 ஏப்ரல், 2020

ரியல் எஸ்டேட் துறையில் பாதிப்புக்கள் ... .இனிமேல்தான் வர இருக்கிறது.

Karthikeyan Fastura : ரியல் எஸ்டேட் .. இந்தத் துறையில் பெரிய நிறுவனங்களுக்கு பாதிப்புகள் இப்பொழுது பெரிதாக இல்லை இனிமேல்தான் வர இருக்கிறது. ஏனென்றால் அரசாங்கத்தின் ப்ராஜெக்ட், பெரிய நிறுவனங்களின் ப்ராஜெக்ட் ஏற்கனவே ஒப்பந்தமாகி சென்றுகொண்டிருக்கும். தற்காலிகமாக அது நிறுத்தப்பட்டு இருக்கலாம். Migrant workers பலரும் தங்கள் ஊர்களை நோக்கி மாநிலங்களை நோக்கி ஏற்கனவே சென்றுவிட்டனர். இவர்களை மீண்டும் இந்த பணிக்கு அழைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அவர்கள் அந்தந்த ஊர்களுக்கு அருகில் கிடைக்கும் வேலையை பார்த்துக்கொண்டு அரசாங்கத்தின் ரேஷன் பொருட்களை வைத்து சமாளித்துக் கொள்வார்களே அவ்வளவு எளிதில் மீண்டும் வந்து விடமாட்டார்கள்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட் கொடுத்த பிற துறை நிறுவனங்கள் அந்த ப்ராஜெக்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும். அல்லது முற்றிலுமாக கைவிடவும் கூடும். ஆகையால் அடுத்த பேமெண்ட் வருவதில் சிக்கல் உண்டு.
அப்பார்ட்மெண்ட் கட்டும் நிறுவனங்கள் 90% தங்களது புராஜக்டுகளை நிறுத்தி வைக்க வேண்டி வரும். காரணம் நிறைய ஐடி நிறுவனங்கள், என்ஜினியரிங் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்க இருக்கிறார்கள். மக்களின் Purchase Power Parity கடுமையாக சேதமடைந்துள்ளது. வங்கிகள் வீட்டுக் கடன்களை நிறுத்தி வைக்கலாம். காரணம் வங்கிகளின் CashFlow கடுமையாக குறைந்துள்ளது.
பொருளாதாரம் மீண்டு எழும்போது மிகக் கடைசியாக எழுந்திருக்கும் துறை என்றால் அது இதுவே. இந்தத் துறையுடன் ஒட்டியுள்ள சிமெண்ட், இரும்புக் கம்பிகள், Civil இஞ்சினியராக கம்பெனிகள் அனைத்தும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.
சிவில் இன்ஜினியரிங்கில் செலவுகளைக் குறைக்கும் தொழில்நுட்பம் இன்று அவசிய தேவை. அதைப் புரிந்து கொண்டு புதுமைகளை புகுத்தும் நிறுவனங்கள் தாக்குபிடிக்கும்.

ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி
கரோனா வைரஸ் வருவதற்கு முன்பே விழுந்த ஒரு துறை ஆட்டோமொபைல்ஸ். வைரஸ் வருவதற்கு முன்பு நம் நாட்டின் பொருளாதாரம் தான் சிதைந்திருந்தது. இப்போது உலகமெங்கும். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், தென்னமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் தான் நமது ஆட்டோ மொபைல்ஸ்களை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகள். ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர பிற தேசங்கள் அனைத்தும் கடுமையான பொருளாதார சரிவை, போக்குவரத்து முடக்கத்தை கண்டுள்ளது. சாலை போக்குவரத்து 100% முழுமையாக திரும்புவதற்கு இரண்டு ஆண்டுகள் போதாது. வைரஸ் பரவலால் சுற்றுலாத்துறையும், போக்குவரத்து துறையும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஆக இந்த இரண்டு காலாண்டுகளுக்கு வருமானம் 0%. ஆனால் செலவுகள் -20%க்கு கொண்டு செல்லும்.
NBFC என்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஏற்கனவே மிக அதிகமாக தள்ளாடி வருகின்றன. (அவர்களுக்கு ஆர்பிஐ-இடம் பிடுங்கி Infuse பண்ணிய பணம் அனைத்தும் முதலை வாய்க்குள் சென்ற கதைதான்). இந்த நிறுவனங்கள் தான் அதிகமான அளவில் வண்டி கடன் கொடுத்து வந்தது. இவைகளின் வாராக் கடன் நிலுவை இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்பதால் புதிய கடன்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனும்போது ஆட்டோமொபைல் துறையில் வண்டிகளின் விற்பனை குறைந்துவிடும். உற்பத்தியையும் அது சேர்த்தே குறைக்கும். வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும்.
வண்டி சர்வீஸ் செய்யும் வருவாய் மட்டும் அவர்களது ஷோரூமை தக்க வைக்க உதவும். இந்தத் துறையும் பழைய பன்னீர் செல்வமா மீண்டு வருவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகும்.
இந்த காலாண்டில் ford நிறுவனம் இரண்டு பில்லியன் டாலர் நஷ்டத்தை காட்டி இருக்கிறது. இப்படி இந்த துறையில் நூற்றாண்டுகளாக இயங்கிவந்த பெரும் நிறுவனங்கள் கூட இம்முறை தப்பிப்பதற்கு வாய்ப்பில்லை. ஒன்று இன்னொரு நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது இழுத்து மூட வேண்டும். ஆகையால் இந்த சூழல் முடியும்போது பல நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒருசில நிறுவனங்களாக சுருங்கிவிடும். வேலைவாய்ப்பும் பாதியாக குறைந்துவிடும்.

1 கருத்து:

விசு சொன்னது…

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவும் சரி மற்ற ஐரோப்பியா நாடுகளும் சரி, கொரோனா தாக்கலுக்கு முன் நல்ல மற்றும் சுமாரான பொருளாதார நிலையில் இருந்தது தான் என்பது நிஜம்.கொரோனா முற்றிலும் அகற்றப்பட்டு இந்நாடுகள் மீண்டு வர குறைந்த பட்சம் இன்னும் ஒரு 18 மாதங்களாக என்பதே என் கணிப்பு.

இந்தியாவின் நிலைமையோ வேறு. கொரோனா தாக்கலுக்கு முன் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பட்ஜெட் பற்றா குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியில் இருந்த வாய்ப்பு துகையான 176,000 கோடியை கூட அரசாங்கம் எடுத்து கொண்டது. இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை இன்று யாரும் கணிக்க முடியாது.