சனி, 15 நவம்பர், 2014

தணிகாச்சலம் கொலை! மணல் மாபியாக்கள் ? நீர்வழி பாதைக்காக போராடிய சமுக ஆர்வலர்......

வேலூர்: மணல் திருட்டை தடுத்தவர்களை மாப்பியாக்கள் கொலை செய்த செய்திகள்தான் இதுவரை அதிகமாக வெளி உலகத்திற்கு சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏரி தண்ணீர் வரும் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வந்த வேலூர் மாவட்டம், மாதனூர் கிராமத்தைச் சேர்ந்த தணிகாச்சலம் கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மக்களை பீதியடைய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தைப் பற்றி பேசிய தணிகாச்சலத்தின் உறவினர் அசோகன், ’’ தணிகாச்சலம் பி.டெக் லெதர் டெக்கானாலஜி முடிச்சிட்டு, ஒரு தனியார் கம்பெனியில வேலைப் பார்த்தார். வேலையில திருப்தி இல்லாம  சொந்த ஊருக்கு வந்து, ஒன்னரை வருஷம் சொந்தமா புங்கம் எண்ணெய் எடுக்குற ஆயில் மில் நடத்தினார். அதுல எதிர்பார்த்த அளவுக்கு லாபமில்லாததால் மில்லை மூடிட்டு, சென்னைக்கு வேலைக்கு போனார். வேலை நேரம் போக மற்ற நேரத்துல, பள்ளி மாணவர்களுக்கும், பி.டெக் மாணவர்களுக்கு இலவசமா டியூசன் எடுத்தார்.
சென்னையில வேலைப் பார்த்தாலும் அடிக்கடி ஊருக்கு வருவார். ஊர்ல எந்தப் பிரச்னையானாலும் முன்ன நின்று தீர்த்து வைப்பார். சுத்துவட்டார கிராமத்தைச் சேர்த்தவங்க தாசில்தார், கலெக்டர் ஆபீஸ்க்கு மனு  எழுதவும், தகவல் அறியும் உரிமை சட்டத்துல மனுப் போடுறதுக்கும் இவர்கிட்டதான் எழுதி வாங்கிட்டுப் போக வருவாங்க. எல்லாருக்கும் எழுதிக்கொடுப்பார். ஆயில் மில் நஷ்டம், பொது மக்களோட பிரச்னைக்காக நிக்குறதுன்னு இருந்தால கல்யாணமே செய்துக்கல.

சான்றோர்குப்பம் மலையில இருந்து வர்ற தண்ணீரால் பாலூர், புதூர் ஏரியில தண்ணீர் நிரம்பும். பாலூர் ஏரி தண்ணீர் பாலூர்ல இருக்குற நிலங்களுக்கு மட்டும்தான் பாசனம் செய்ய முடியும். ஆனால், புதூர் ஏரி தண்ணீர் தோட்டாளம், தேவிகாபுரம், மாதனூர், புதூர்னு நாலு கிராமத்தைச் சுத்தி இருக்குற 1500 ஏக்கர் நிலத்துக்கு பாசனம் நடக்குது. பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவங்க, 20 வருஷமா தண்ணீர் வர்ற வாய்க்கால் பகுதிகளை தூர்த்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

இதனால கடந்த 10 வருஷமா நாலு கிராமத்துலையும் தண்ணீர் பிரச்னை தலைவிரிச்சாட ஆரம்பிச்சது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லி, தாசில்தார், கலெக்டருக்கு பலமுறை மனுக்கொடுத்தும் ஒரு நடவடிக்கையும்  இல்லை. அடுத்து, இந்தப் பிரச்னைக்காக உயர்நீதிமன்றத்துல வழக்குப் போட்டார். 2 வருஷம் நடந்த வழக்கோட தீர்ப்புல ஆக்கிரப்புகளை அகற்ற சொல்லி உத்தரவுப் போட்டாங்க.

அதுக்கு பிறகும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கல. ரெண்டு மாதத்துப் பிறகு மீண்டும்  நீதிமன்றத்தை நாடியதில் மாவட்ட நிர்வாகம் ரெண்டு மாதத்துல ஆக்கிரமிப்புகளை அகற்றிடுறோம்னு சொல்லி அனுமதி வாங்கி, ஆக்கிரமிப்புல இருந்த இடங்கள்ல மரங்களை வெட்டிட்டு, 150 மீட்டர் பள்ளம் எடுக்குறதுக்குள்ள ஆம்பூர் எம்.எல்.ஏ. அஸ்லாம் பாஷா, பாலூர் கிராமத்தைச் சேர்ந்த அரசியல்வாதிங்களோட வந்து பிரச்னை செய்து வேலையை நிறுத்திட்டாங்க.

மீண்டும் வேலையை துவங்க சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு மனுக் கொடுத்தும் வேலை நடக்கல. மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு இந்த வாரத்தோட முடியுது.  அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய எல்லா ஏற்பாடுகளையும் தணிக்காச்சலம் செய்தார். 

வழக்கு பதிவான எல்லாருக்கு பிரச்னை உருவாகும் சூழல் இருந்தது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்களின் நலனுக்காக முன்ன நின்னவரை கொலை செய்துட்டாங்க. காவல்துறை தணிகாச்சலத்தை கொன்னவங்களை கண்டுபிடிக்கனும். அதேசமயம் தணிகாச்சலம் விட்டுப்போன வழக்கை ஊர் மக்களே எடுத்து நடத்தறதா முடிவு செய்திருக்கோம்’’ என்றார். 

 -காசி.வேம்பையன்   news.vikatan.com
படம்: ச.வெங்கடேசன் 

1 கருத்து:

nanban சொன்னது…

https://www.facebook.com/photo.php?fbid=961690403858739&set=a.187424774618643.49165.100000533650052&type=1&theater