சனி, 15 நவம்பர், 2014

வண்டலூர் பூங்காவிலிருந்து 2 புலிகள் தப்பியோட்டம்?

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 புலிகள் தப்பி விட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அதை உயிரியல் பூங்கா அதிகாரிகள் மறுத்தனர்.
புலிகள் தப்பிய செய்தி காட்டுத் தீ போல பரவியதால் அந்தப் பகுதியில் கடும் பீதி நிலவுகிறது.
சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கே சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் இயற்கைச் சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கூண்டுகளில் புலிகள் அடைக்கப்படுகின்றன. அவை சுற்றித் திரிய பெரிய சுற்றுச் சுவருடன் கூடிய திறந்த வெளி வளாகமும் உள்ளது.

இந்த திறந்த வெளிப் பகுதி சுற்றுச் சுவரின் ஒரு பகுதி மழையில் நனைந்து வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
இதில் ஏற்பட்ட இடைவெளி வழியாக 5 புலிகள் வெளியேறிவிட்டதாக செய்தி பரவியது. மேலும், வெளியேறிய 5 புலிகளில் 3 புலிகளை பூங்கா ஊழியர்கள் பிடித்து கூண்டில் அடைத்துவிட்டதாகவும், இரண்டு புலிகள் இன்னும் பிடிபடவில்லை என்றும் செய்தி பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
ஆனால், இதை பூங்கா அதிகாரிகள் மறுத்துள்ளனர். புலிகளுக்கான திறந்த வெளி அரங்கத்தில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது உண்மைதான். ஆனால், இடிந்து விழுந்த இடத்தில் தாற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தியுள்ளோம். புலி ஏதும் தப்பிச் செல்லவில்லை. புலி தப்பியதாக வெளியான செய்தி தவறானது என்று அதிகாரிகள் கூறினர். dinamani.com

கருத்துகள் இல்லை: