வெள்ளி, 14 நவம்பர், 2014

கமலஹசன்: கதை திருட்டை தேடி தேடி கண்டு பிடிக்கும் ரசிகன் வளரவே மாட்டான்!

அதானே திருட்டு டிவிடியையும் தேடி தேடி கண்டுபிடிக்கும் சினிமாகாரனும்  வளரவே மாட்டான்யா? ''
ஆனா, இப்போ எந்தப் படம் வந்தாலும் காப்பி, இன்ஸ்பிரேஷன்னு ஒரே சர்ச்சையா இருக்கே! இன்ஸ்பிரேஷன் எப்போ காப்பி ஆகுது? அதைத் தவிர்க்க முடியாதா?''
''சினிமா பண்றவன் பண்ணிட்டே இருக்கான். அவன் எங்கே இருந்து என்ன காப்பி அடிக்கிறான்னு சிலர் தேடிட்டே இருக்காங்க. அதை நானும் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ஒரு பிராயத்தில் வரும். ஜெயகாந்தன் கதையைப் படிச்சுட்டு, 'இந்த மாதிரி படம் எடுக்கணும்’னு ஆரம்பிப்பேன். இது சினிமாவில் மட்டும் அல்ல... 'டைம்’ பத்திரிகையும் 'நியூஸ் வீக்’ பத்திரிகையும் கிட்டத்தட்ட ஒரே தலைப்போடு வரும். அது ஒருவகையான உத்வேகம். ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் போட்டி.
ஒரு விஷயம்... நான் இதுவரை வெளியே சொன்னது இல்லை. இப்போ சொல்லலாம். சுஜாதா இப்போ இருந்தாலும் கோவிச்சுக்க மாட்டார். 'தினமணி கதிர்’ல 'சொர்க்கத் தீவு’னு ஒரு கதை எழுதிட்டு இருந்தார் சுஜாதா. அந்தக் கதை பாதியில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமான நாலைஞ்சு பேரில் நானும் ஒருவன்.
இரா லெவின்னு ஓர் அமெரிக்க எழுத்தாளர் எழுதின 'திஸ் பெர்ஃபெக்ட் டே’ங்கிற நாவலுக்கும் 'சொர்க்கத் தீவு’க்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இதை நான் சொன்னதும் அவரும் கதையை நிறுத்திட்டார். ஆனா, அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன். 'நீங்க கதையை நிறுத்தாம எழுதியிருக்கலாம் சார்’னு நான் சொல்லவும், 'நீயே நிறுத்திட்டு, இப்போ எழுதியிருக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?’னு கடுப்பாகிட்டார். படைப்புத் தொழிலில் இதுபோல சில சங்கடங்களைத் தவிர்க்க முடியாது.
காப்பி, இன்ஸ்பிரேஷன் இவற்றுக்கு எல்லாம் எப்படி அணை போடுவீங்க? 'ஐ ரோபோ’ படம்தானே 'எந்திரன்’. ஆனா, 'ஐ ரோபோ’ படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே நானும் ஷங்கரும் அந்தக் கதை பத்தி பேசியிருக்கோம். 'ஐ ரோபோ’, அசிமோவோட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நம்ம கம்பனைப் பத்தி என்ன சொல்றது? 'எழுதின ராமாயணத்தைத் தானே நீ திரும்ப எழுதியிருக்கே...’னு சொல்லி அவரைச் சிறுமைப்படுத்த முடியுமா? ரவீந்திரநாத் தாகூரின் எந்த வேலையும் ஒரிஜினல் இல்லைதான். அதுக்காக அவரை மதிக்காம இருக்க முடியுமா? ஜெயகாந்தனுக்கும் இப்படி எங்கேயோ ஓர் உந்துதல் இருக்கும் இல்லையா? சிலர் எந்தச் சாயலும் இல்லாம தன்னிச்சையா எழுதுவாங்க. சிலர் எங்கே இருந்து எடுத்தாங்கனு தெரியுற சாயலோடு எழுதுவாங்க. அது இல்லாம கலை நடக்காதுனு தோணுது. இன்ஸ்பிரேஷன் இல்லாம இருக்க முடியாது. ஆனா அப்படியே அப்பட்டமா காப்பி அடிக்கிறது, ஓரளவு கலை கைவர்ற வரைக்கும் பண்ணுவாங்க. ஒண்ணுமே தெரியாம இருக்கும்போதுதான் பார்த்துப் பார்த்து டிரேஸ் எடுப்பான். வளர்ந்த பின்னாடி அதைச் செய்ய மாட்டான் கலைஞன். ஏன்னா, கலை கை வந்த பிறகு அவனுக்கு திமிர் வந்திரும்.

இன்னொரு விஷயம்... யார் யாரெல்லாம் காப்பி அடிக்கிறான்னு தேடிட்டு இருக்குற ரசிகன், அடுத்த கட்டத்துக்கு வளரலைனு அர்த்தம். முழு ரசிகனா வளர்ந்துட்டா, அதை பெரிய விஷயமா யோசிக்க மாட்டாங்க. 'காப்பியடிச்சுட்டான் ஓ.கே அதை நல்லா பண்ணியிருக்கானா?’னு பார்க்க ஆரம்பிச்சிருவான். நான் எப்படித் தட்டுத்தடுமாறி கலைஞனா வளர்ந்தேனோ, அது மாதிரி ரசிகனா, அவனும் தன் விலாசத்தை தேடிட்டு இருக்கான். சீக்கிரமா கண்டுபிடிச்சிருவான்!''
( கேள்வி, பதில் நன்றி விகடன் )  

கருத்துகள் இல்லை: