வெள்ளி, 19 மார்ச், 2010

ஊடகம் இனியும் பூடகமில்லை.எஸ்.எம்.எம்.பஷீர்

சுடரொளி" வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் என பல வருடங்கள் செயற்பட்டு , பின்னர் அவர் இலங்கைக்கு சுனாமியின் பின்னர் சென்றபோது அங்கு புலிகளால் தண்டிக்கப்பட்டு, இலண்டன் திரும்பியதும் புலிகளுக்கு எதிராக மாறிய நபரை வித்தியாதரன் இலண்டனில் தன்னை சந்தித்து மீண்டும் புலிகளுடன் இணைந்து வேலை செய்யுமாறு வேண்டிக்கொண்டதாக அந்த நபரே என்னிடம் கூறினார். மேலும் வீரகேசரிப் பத்திரிக்கையில் பணியாற்றிய ஸ்ரீ கஜன் என்பவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவினை சதிகொலை செய்ய முனைந்த கரும்புலியுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றதன் பேரில் கைது செய்யப்பட்டு 25 அக்டோபர் 1998 ல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இவர் இப்போது வீரகேசரி செய்தி ஆசிரியராக இருக்கும் ஸ்ரீ கஜநேயாவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறை இவர் யாழ்ப்பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் எனபது இன்னுமொரு சுவாரசியமான செய்தி.




மேலும் வீரகேசரி பத்திர்கையில் பணியாற்றி பின்னர் ஐரோப்பாவிற்கு அகதியாக வந்த இன்னுமொருவர் , புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய வானொலியொன்றில் கருத்துரைப்பவர் இலங்கை சென்று தனது ஊரான வாழைச்சேனைக்கு சென்றபோது அங்கு வைத்து புலிகளால் இந்த ஊடகவியலாளரின் தகவலின் பேரில் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன , இவரே பின்னர் புலி ஊடகமொன்றின் முக்கிய நிகழ்ச்சி தயாரிப்பாளராக செயற்பட்டதாக செய்திகள் கூறின. இப்போதும் அக்கொலைக்கான காரணகர்த்தாவாக குற்றம் சாட்டப்படும் அந்நபர் இன்னமும் புலி சார்பு ஊடகத்தில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.



ஊடகவியலாளனும் இன வெறியும் புலிவெறியும் கொண்டு கொலைகளுக்கு பின்புலமாக நின்றிருந்தால் அவனை ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா பொரூத்தமாகவிருக்கும்?. முன்னாள் சுதந்திர ஊடகவியலாளராக தன்னை காட்டிக்கொண்ட இன்னுமொருவர் தற்போது ஐக்கிய ராச்சியத்தில் அகதியாக வாழ்வதாக சொல்லப்படுபவர் , முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான புலிகளின் முன்னாள் உறுப்பினர் , தீவிர முஸ்லிம் விரோத செய்தியாளர் எனக் கூறப்படும் ஜெயானந்த மூர்த்தி. இவர் இலங்கையில் செய்தியாளராக இருந்த காலத்தில் (07.01.2003) இவரது வீட்டின் மீது கைக்குண்டொன்று இவர் வீட்டில் இல்லாத சமயம் வீசப்பட்டு , இவரது வீடு சிறு சேதத்திட்குள்ளானபோது தனது வீட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவமொன்றுக்கு எவ்வித ஆதாரமுமற்று இவருக்கு சார்பாக "கிழக்கு செய்தியாளர் சங்கமும்" அக்குண்டு தாக்குதல்களுக்கு காரணம் " முஸ்லிம் சமூக மேம்பாட்டு முன்னணி" என்று தமிழ் தேசிய ஊடகங்களில் செய்தி வெளியிட்டு , வெளியிடச்செய்து தமது முஸ்லிம் விரோதப்போக்கை வெளிப்படுத்தியவர். இவர்கள் எல்லாம்தான் அன்று தமிழர் தேசியக்கூட்டமைப்பை ஆட்கொண்டிருந்தவர்கள் . இன்று வரை கடல் கடந்து அகதியாகி இலங்கையில் தமிழ் தேசம் நிர்மாணிக்க கனவு கண்டு கொண்டிருப்பவர்கள்



புலிகளின் தமிழ் தேசிய தொலைக்காட்சியான தமிழீழ தேசிய தொலைக்காட்சி இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அதன் சின்னமாக தேசிய மலராக புலிகள் தேர்ந்தெடுத்த கார்த்திகை மலர் தொலைக்காட்சியில் சகல நிகழ்ச்சிகளிலும் திரையில் தோன்றுமாறு காண்பிக்கப்பட்டது. சமாதான காலத்தில் தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் ஊடகவியலார்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு படையெடுத்தனர். அவ்வாறு ஒரு தடவை சமாதான காலத்தின் பொழுது , அதுவும் புலிகளின் தனியான தமிழீழ தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் தெற்கிலிருந்து நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு மூவினத்திலிருந்தும் ஊடகவியலாளர்கள் கிளிநொச்சிக்கு சென்றபோது சில சிங்கள ஊடகவியலாளர்கள் , தமிழீழ தேசிய தொலைக்காட்சி நடத்தும் ஊடகவியலாளர்களிடம் ஆவல் மேலிடக் கேட்டார்கள் "மிகவும் நச்சுத்தன்மையுள்ள கார்த்திகை மலரை ஏன் தேசிய மலராக்கி கொண்டீர்கள்" (தகவல் ; சத்தார் –நவமணி) என்று; அதற்கு அவர்கள் சொன்ன பதில் பூவின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது , பூவின் மறுபக்கமுள்ள மருத்துவக்குனங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விளக்கமளித்ததாக கூறப்பட்டது.



உண்மையில் புலிகளின் ஊடகவியலாளர்கள் தமிழ் தேசிய ஊடகவியலாளர்களும் கார்த்திகை பூவைப்போலவே இருக்கிறார்கள் ,தன்னகத்தே மிகுந்த நஞ்சைக் கொண்டிருகிறார்கள் , தமது ஊடகப்பணி மூலம் தீவிர தமிழ் தேசிய நம்பிக்கைகளுக்காய் அவர்கள் செய்யும் நன்மையை விட அவர்கள் தமது தேசிய வெறியுடன் சிங்கள முஸ்லிம் எதிர்ப்புணர்வுடன் நச்சை உலகெங்கும் கக்கி வருகிறார்கள் அல்லது மறைத்துக்கொண்டு அவ்வப்போது தமது நச்ச்சுக்கருத்துக்களை கசியவிடுகிரார்கள்.



மானிப்பாய் மின்னல் ரங்கா (சக்தி தொலைகாட்சி) ஊடகவியலாளர் என்ற வகையில் தன்னை பற்றி மிகப் பெரிதாக நினைப்பவர் என்பதை அண்மையில் நான் இலங்கை தொலைகாட்சி நிகழ்ச்சியில் அவர் பிதற்றும் கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. தான் இலங்கையின் ஒட்டு மொத்த அரசியலையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம் இருப்பது போல் டக்லஸ் தேவானந்தா மற்றும் தொண்டமான் போன்றோர் தனக்கு பயப்படுவது போல் எதிர் கருத்துக்களை கூறி -அதன் விளைவாய் ஏற்படும் சாதக நேர்கருத்துக்களை முதலீடு செய்யும் விதமாக நாசூக்காக தனது "ஊடகவியல்" அனுபவத்தை வெளிப்படுத்தினார்.



இவர் அரசு- புலி சமாதான காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஐரோப்பிய விஜயத்தின் போது , ஜனாதிபதியுடன் நெருங்க வாய்ப்பு கிடைத்ததென்றும். அதனைப் பயன்படுத்தி தான் ஒரு பெரிய வெகுமதியை பெரும் வகையில் செயற்பட்டு, ஜனாதிபதிக்கு நெருக்கமானபோது. ஜனாதிபதியின் சிபாரிசின்படி இவருக்கு நோர்வேயின் இலங்கை தூதுவராலயத்தில் முதன் நிலை செயலாளர் (ஊடகம்) ( First Secretary-Media ) வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும். அந்நியமனத்தி ற் கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டனவென்றும், ஆனால் ரங்கா உண்மையில் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென்பதால் , தான் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் , அவ்வாறு செல்வதற்கு தனக்கு எதிரணியில் கூட பெரும் செல்வாக்கிருக்கிறது என்பதை காட்ட அவர் மேற்கொண்ட உத்திதான் தனக்கு முதல்நிலை செயலாளர் (ஊடகம்) பதவிக்கான நியமனம் பெறுவதற்கான நடவடிக்கைகள் கிடைத்தும் தான் செல்லவில்லை; நீங்கள் எனக்கு என்ன தரப்போகிறீர்கள், என்ற பேரம் பேசும் நிலையில் தன்னை உயர்த்திக்காட்டி தனது எம்.பீ பதவிக்கான சூழ்நிலைகளை ஐக்கியதேசியக் கட்சியின் ஊடாக ஏற்படுத்தியுள்ளார் என்று தெரியவருகிறது . அதேவேளை தன்னைபற்றி, தனது ஆளுமை பற்றி அதீத எண்ணம்கொண்ட ரங்கா , மாறாக தனக்கு நோர்வேயில் தூதுவர் பதவியில் அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டால் , அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டதாக எனது ராஜரீய தொடர்புகள் கூறின. சரி போகட்டும் இவரது கல்வியும் தகுதியும் என்ன என்பது ஒரு புறமிருக்க இவர் தன்னை பற்றி என்ன நினைத்துள்ளார் என்பதற்கு வேறு என்ன சாட்சி தேவை.

கருத்துகள் இல்லை: