வியாழன், 23 அக்டோபர், 2014

சென்னையில் அடகுக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை: 100 பவுன் திருட்டு !

கோபி, சென்னை விருகம்பாக்கம் அருகே அடகு கடை உரிமையாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்து, கடையிலிருந்த 100 பவுன் நகைகளைத் திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:-
 ராஜஸ்தானைப் பூர்வீமகாகக் கொ்ண்டவர் ஹீரா ராம் சௌத்ரி (56). இவர் கடந்த 40 வருடங்களாக சென்னையில் வசித்து வந்தார். ஆற்காடு சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெருவில் அடகு கடை ஒன்றை நடத்தி வந்த ஹீராராமுக்கு இரு மகள்கள், மகன் உள்ளனர்.
 இந்நிலையில் புதன்கிழமை மாலை ஹீராராமின் அடகு கடைக்கு, மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். தனது நகையை அடகு வைக்க வேண்டும் என்று அந்த நபர் கூறியதாகத் தெரிகிறது.

 அந்த நகையை வாங்கி லாக்கரில் வைக்க கடையினுள் இருந்த மற்றொரு அறைக்கு ஹீராராம் சென்றுள்ளார். அப்போது மேலும் இரு நபர்கள் கடைக்குள் நுழைந்துள்ளனர்.
 அவர்கள் மூவரும் ஹீராராமின் தலையில் பலமாகத் தாக்கியதாகத் தெரிகிறது. மேலும் கத்தியைக் கொண்டு அவரது கை, தலையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஹீராராம் நிலைகுலைந்து மயக்கமடைந்தார்.
 அப்போது அந்த நபர்கள் கடையில் இருந்த 100 பவுன் நகைகளைத் திருடி சென்றனராம். திருடு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 இரவு வெகுநேரமாகியும் ஹீராராம் வீடு திரும்பாதததால், அவரது மகன் ஆனந்த் கடைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ரத்த வெள்ளத்தில் ஹீராராம் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆனந்த், இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
 உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹீராராமை, அருகிலிருந்தவர்கள் மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சேர்த்தனர். தகவலறி்ந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
 இந்நிலையில் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி ஹீராராம் உயிரிழந்ததார். இதையடுத்து போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 அடகு கடையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படாததால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறி்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அருகில் இருந்த மற்றொரு கடையில் பொருத்தப்பட்ட கேமரா,  போக்குவரத்து சிக்னல் கேமராக்களில் பதிவான உருவங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 ஹீராராமின் செயல்பாடுகள், அவரது கடை விவரங்களை நன்கு அறிந்த நபர்கள் இந்த சம்பத்தில் ஈடுபட்டிருக்கலாம்  என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.dinamani.com

கருத்துகள் இல்லை: