புதன், 31 ஜூலை, 2024

யாழ்ப்பாண அகராதி - 1842 - 58,500 சொற்கள் - புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி!

May be an image of map and text

தினமணியில் கலா ரசிகன் (வைத்தியநாதன்) எழுதிய பதிவு.
28.7.2024  ·
யாழ்ப்பாண அகராதி
திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தால்,
ஆவணக் காவலர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு இருக்கின்ற புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி,
நமக்குப் பாதுகாத்து வழங்கி இருக்கின்ற அருட்கொடைகளுள் ஒன்று யாழ்ப்பாண அகராதி.
அவரது சேகரிப்பில் இருந்த இந்தப் புத்தகத்தை, மீள்பதிப்பு செய்து,
காலத்தின் ஓட்டத்தில் அது கரைந்து மறைந்து விடாது காப்பாற்றிய பெருமை,
என் நண்பர் தமிழ் மண் பதிப்பக உரிமையாளளர் மறைந்த இளவழகனாரைச் சாரும்.
வீரமா முனிவர் 1732 ஆம் ஆண்டு, சதுர் அகராதி ஆக்கினார் என்றாலும்,
அது 1824 இல்தான் முழுமையாக அச்சுப் பதிக்கப் பெற்றது.


அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு,
1842 இல் ஓர் அகராதி உருவாகி, அச்சில் ஏறியது.
யாழ்ப்பாண அகராதி என்பதால்,
இது யாழ்ப்பாணத் தமிழுக்கான அகராதி என்று கருதி விடல் ஆகாது.
யாழ்ப்பாணம், மலையகம், ஒட்டுமொத்த இலங்கைக்கு என்று தனியாக எந்தவொரு அகராதியும் இல்லை.
தமிழ்மொழியை ஐயந்திரிபறக் கற்றால் ஒழிய,
தமது சமயப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்பதை, கிறித்துவ மிஷனரிகள் உணர்ந்தனர்.
அதனை அவர்கள் எழுதிய நாட்குறிப்புகளும், கடிதங்களும், தெளிவாகவே புலப்படுத்துகின்றன.
மிஷனரிப் பாதிரியார்கள் தங்களது தமிழ்வழிக் கல்வியை வளர்த்துக்கொள்ள,
உள்ளூர் தமிழ் அறிஞர்களை அணுகினார்கள்.
ஒரே வழி, அகராதியின் தன்மை போன்ற நிகண்டுகளைப் படிப்பது.
ஆனால் அது அவர்களுக்குச் சிக்கலாக இருந்தது.
எனவே, அவர்கள் வழக்கத்திற்கு ஏற்ப அகராதியை ஆக்கினர்.
வட்டுக்கோட்டை மிஷனரி என்றும் பெயருடன், அமெரிக்க மிஷனரிகள் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியை யாழ்ப்பாணத்தில் 1732 இல் நிறுவினார்கள்.
அவர்கள்தான், முதன்முதலில் அகராதி தொகுக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
1728 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த ஜோசப் நைற் என்பார்,
தமிழ் அகராதிக்கான தரவுகளைத் திரட்டத் தொடங்கினார்.
அந்தப் பணி நிறைவு பெறுவதற்கு முன்பே இயற்கை எய்தினார்.
அவரது நண்பர் ஒருவர், ஜோசப் நைற் திரட்டியவற்றைப் பெற்று, சாமுவேல் ஹட்சின்ஸ் என்ற மிஷனரி மூலமாக 1742 இல் அதை அச்சில் ஏற்றினார்.
இதற்கு முதலில் வழங்கிய பெயர் பேரகராதி.
இது யாழ்ப்பாணத்து அகராதி என்றும்
மானிப்பாய் அகராதி என்றும் வழங்கப்பட்டது.
தமிழ் மொழியின் சொல் வளத்தை,
அகர வரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சி, இந்த அகராதிதான்.
இது ஈழத்தில் வெளியான முதல் தமிழ் அகராதி மட்டும் அல்ல, வீரமா முனிவரின் சதுர் அகராதியை விட மேம்பட்டது.
இந்த அகராதியில் 58,500 சொற்கள் உள்ளன.
அதாவது, சதுர் அகராதியை விட நான்கு மடங்கு சொற்கள் உள்ளன.
சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை இருவரின் பெரும் பங்கு அளிப்புடன் உருவான இந்த அகராதியை,
175 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் உலகுக்கு மீள் பதிவு செய்து வழங்கிய இளவழகனாருக்கும்,
அதைப் பாதுகாத்து வழங்கிய ஆவணக்காவலர் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்திக்கும்,
தமிழகம் வாழ்நாள் கடன் பட்டு இருக்கின்றது.
தினமணியில் கலா ரசிகன் (வைத்தியநாதன்) எழுதிய பதிவு.
28.7.2024

கருத்துகள் இல்லை: