சனி, 23 ஆகஸ்ட், 2014

யூ.ஆர். அனந்தமூர்த்தி !

பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 82 வயதான அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலமானார். அனந்தமூர்த்தி இந்திய எழுத்துலகில் ஒரு தனி இயக்கமாகவே இயங்கியவர். ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றிய அவர், அன்னை மொழியான கன்னடத்தில் அற்புதமான படைப்புகளை தந்தவர். எழுத்தாளர் என்பதோடு நில்லாமல் திரைக்கதை ஆசிரியர்,விமர்சகர்,வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டிருந்த அவர் அடிப்படையில் சமஸ்கிருத பள்ளியில் தன்னுடைய கல்வியை துவங்கியவர்.
அவரின் எழுத்துக்கள் மரபான சங்கதிகளை முழுவதுமாக எதிர்க்கிற போக்கை செய்யாமல் அவற்றைப் பற்றிய தெளிவான புரிதலோடு அணுகின. மரபை ஒட்டி நடக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சமூகத்தில் நிலவும் போலித்தனங்களை அங்கதத்தோடு அவரின் கதைகள் சாடின. 'சம்ஸ்க்ரா' நாவலில் வைதீகத்தை தீவிரமாக கைக்கொண்டு இருக்கும் நாயகனுக்கும், அதை முற்றும் எதிர்த்து குரல் கொடுக்கும் நாரணப்பாவுக்கும் நடக்கும் போராட்டம், எங்கெங்கும் நடப்பது. எப்படி சமத்துவமின்மையை மரபு என்கிற பெயரில் தூக்கிப்பிடிக்கிறோம் என்கிற உண்மையும்,இயல்பான உணர்வுகளை ஒழுக்கம் என்கிற போர்வையில் அடக்கி வைக்கிறோம் என்கிற உண்மையும் முகத்தில் அறைகிற பொழுது, ஒளிந்து கொள்ளாமல் அவற்றை எதிர்கொள்ள திரும்பி வரும் அந்த பாத்திரப் படைப்பு, காலங்களை கடந்து நிற்கும். அதே கதை திரைப்படமாக வந்து தேசிய விருது பெற்றது.
குடும்பங்களில் பெரிதாக குரல் எழுப்பாமல் அமைதியாக இயங்கி வருவதாக கருதப்படும் பெண்களுக்குள் இருக்கும் ஆவேசம் மற்றும் கோபங்களை அவரின் பிறப்பு நாவல் காட்சிப்படுத்தியது.  'வெட்டுக்கிளி' நாவலில் பொருள் தேடி உழைக்கவோ,வாழ்க்கையின் வேகங்களுக்கு ஈடு கொடுக்கும் விருப்பமோ இல்லாத நாயகன் வெங்கடா, சின்னச்சின்ன அற்புதங்களில் அளவில்லாத மகிழ்ச்சி கொள்கிறான். அவன் மனைவி,பிள்ளை என்று எல்லாரும் அவனை கரித்துக்கொட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் ,"நீயெல்லாம் ஒரு தந்தையா ?" என்று மகன் ஆவேசப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். அப்பொழுது வெங்கடா வீட்டின் முற்றத்தில் சூரிய ஒளியில் நிம்மதியாக இருக்கும் வெட்டுக்கிளியை கண்டு மனங்குளிர்கிறான்.
வேதகாலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண்டார்கள் என்கிற உண்மையை மறைத்து பைரப்பா எழுதிய பொழுது, அதை எதிர்த்து இவர் குரல் கொடுத்தார். அதற்கு கடுமையான விமர்சனங்கள் வலதுசாரிகளிடம் இருந்து வந்ததும், இனிமேல் இலக்கிய விமர்சனமே செய்யப்போவதில்லை என்று அவர் அறிவித்தார். தமிழ் மொழியை தன் மாநில பள்ளிகளை விட்டு கர்நாடக அரசு வெளியேற்றிய பொழுது அதற்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தார்.
வலிமையான அரசே தேவை என்று இந்துத்வவாதிகள் சொல்லி வருவதை சார்ந்து, கூர்மையான பார்வையோடு ஹிந்துத்வா மற்றும் சுயராஜ்யம் என்றொரு நூலை அவர் எழுதிக்கொண்டு இருந்தார். புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்ற பொழுது அவர் இரண்டு கிட்னியும் செயலிழந்து டயாலிசிஸ் மூலமே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தார். இருந்தாலும் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்தார்.
லண்டனுக்கு உரையாற்ற சென்ற பொழுது இப்படி அவர் சொன்னார் ,"இந்தியாவில் அன்னை மொழியில் எழுதும் அற்புதமான எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சார்பாக உங்கள் முன்னர் நிற்கிறேன் !". பாசிசத்தின் காலத்தில் எப்படி புனைவிலக்கியம் எழுந்தது என்பதில் முனைவர் பட்ட ஆய்வு செய்த அவர் ஓயாமல் அதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பினார்.
"தமிழ் என்றால் அழகு என்று அர்த்தம். என்  ஒரிய சமையல்காரர் இந்தியோ,கன்னடமோ எந்த மொழியில் பேசினாலும் அதற்கு ஏற்ப மாற்றிக்கொண்டு ஐரோப்பியன் போல பேசுவார். தமிழ் அப்படிப்பட்ட மாற்றங்களுக்கு தன்னை பெரும்பாலும்  உட்படுத்திக்கொள்வதில்லை. அது தனித்து இருக்கிறது. அதன் இந்த இறுக்கமான தன்மையே அதன் தனித்த பண்பு. தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்வதில் பெருமை கொள்வார்கள். அவர்களின் கலாச்சார வேர்கள் வலிமையானவை. எந்த நாட்டின் கடந்த காலத்தை விட உயிரோட்டம் மிகுந்ததாகவும்,நினைத்து இன்புறும் வகையிலும் அமைந்திருக்கிறது. அவர்கள் மொழியின் கவிதைகளில் இருக்கும் உணர்வுகள் பல்வேறு சங்கதிகள் பிரமிக்க வைப்பவை." என்று அவர் திறந்த மனதோடு பதிவு செய்தார்.
முதலாளித்துவம்,பணம்,வளர்ச்சி என்று கவனம் கொண்டிருக்கும் நாம் விளிம்புநிலை மக்களில் இருந்து எழும் அற்புதமான எழுத்துக்களை கவனிப்பதில்லை என்று ஆதங்கத்தோடு இருந்தார். ஞானபீட விருது பெற்ற அவரின் அதிர்வுகள் நெடுங்காலத்துக்கு நீடித்து நிற்கும்.
- பூ.கொ.சரவணன்

ஜெயமோகன் : கன்னட இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான யூ.ஆர்.அனந்தமூர்த்தி இன்றுமாலை மறைந்தார். தென்கனராவின் சோஷலிச இயக்கத்தின் வழியாக உருவாகி வந்த அனந்தமூர்த்தி வாழ்நாளின் பிற்பகுதியில் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளராக ஆனார். கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலையின் துணைவேந்தராகவும் சாகித்ய அக்காதமி மற்றும் நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராகவும் பணியாற்றினார். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா அவருக்கு பெரும்புகழைப் பெற்றுத்தந்த நாவல். அவரது நண்பர் ஏ.கே.ராமானுஜனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவருக்கு மேலும் பெருமைசேர்த்தது அந்நூல். அவஸ்தே, பாரதிபுரா, ஹடஸ்ராத்தா ஆகிய நாவல்களும் அவரை புகழ்பெற வைத்தன. இவை தமிழிலும் வாசிக்கக் கிடைக்கின்றன
இந்திய நவீனத்துவத்தின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என்று அனந்தமூர்த்தியைக் குறிப்பிடலாம். எம்.முகுந்தன், அக்ஞேய, சுனீல் கங்கோபாத்யாய, சுந்தர ராமசாமி என இந்திய நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் உரிய பல பொதுக்கூறுகள் அவரது ஆக்கங்களில் உண்டு. இந்திய மரபை முற்றிலும் எதிர்மறைக்கோணத்தில் அணுகுதல், சமகால வாழ்க்கையின் பொருளின்மையை வலுவான படிமங்கள் வழியாக சித்தரித்தல், அங்கதம், கனகச்சிதமான வடிவம், பிரக்ஞைபூர்வமான மொழிநடை என அவ்வியல்புகளை ஒருவகையாக வகுத்துச் சொல்லமுடியும்.
நான் யூ.ஆர்.அனந்தமூர்த்தியை நான்குமுறை சந்தித்திருக்கிறேன். 1986ல் எம்.கோவிந்தனைச் சந்திக்க நானும் சுந்தர ராமசாமியும் ஆற்றூர் ரவிவர்மாவும் ஷொர்ணூர் சென்றிருந்தபோது அவரும் எம்.வி.தேவனும் எர்ணாகுளத்தில் இருந்து வந்திருந்தனர். அனந்தமூர்த்தியின் தொடர்ச்சியான உரையாடல் நல்ல உரையாடல்காரரான எம் கோவிந்தனை புன்னகையுடன் கவனிக்கச்செய்ததை நினைவுகூர்கிறேன். பின்னர் அவரை எர்ணாகுளத்தில் எம்.பி.பால் நினைவுக்கூட்டத்தில் சந்தித்தேன். அதன்பின்னர் டெல்லியில் இந்தியா இண்டர்நேஷனல் சென்டரில் இருமுறை
அனந்தமூர்த்தியுடனான சந்திப்புகள் எல்லாமே உற்சாகமானவையாக நினைவில் நிற்கின்றன. தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பவர். மேற்கோள்கள், நக்கல்கள், அடிக்குறிப்புகள் என சென்றுகொண்டே இருக்கும். அவ்வுரையாடல்கள் வழியாக அவரை ஓர் எழுத்தாளர் என்பதைப்பார்க்கிலும் பேராசிரியராகவே நினைவில் பதித்துக்கொண்டிருக்கிறேன். அவரது மதிநுண்மையும் கூர்மையுமே அவரது படைப்புலகின் எல்லைகளையும் அமைத்தன என்று தோன்றுகிறது. அவரை மீறி ஏதும் நிகழாத புனைவுகள் அவர் உருவாக்கியவை.
கடைசியாக நாங்கள் சமணப்பயணம் மேற்கொண்டிருந்தபோது ஷிவ்மொக்கே சென்றிருந்தபோது அவரிடம் போனில் பேசினேன். அவருடைய ஊரில் இருக்கிறேன் என்று சொல்லி பெங்களூர் வந்தால் அவரை பார்க்கமுடியுமா என்று கேட்டேன். சிறுநீர் கோளாறுக்காக டயாலிஸிஸ் செய்துகொண்டிருப்பதாகவும், எவரையும் சந்திக்கமுடியாத நிலை என்றும் சொல்லி அவரது ஊரின் நினைவுகளை நான் கிளறிவிட்டதாகச் சொன்னார்.

கருத்துகள் இல்லை: