செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

கி.வீரமணி21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவினை மனிதனே சுமக்கும் அவலம் ஒழிக்கப்பட வேண்டும்; நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மலம் அகற்றப்பட வேண்டும்  அத்தொழிலாளர்களை அத்தொழிலி லிருந்து விடுவித்து, மாற்றுப் பணிகள் தந்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்த 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அவலங்களில் ஒன்று மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமந்து செல்லும் மிகக் கேவலமாகும். இது அநாகரிகத்தின் உச்சம்! இது  -மனிதர்களை மிருகங்களைவிடக் கேடான நிலையில் நடத்துவது அல்லவா?

இயந்திரமயமாகி தொழில் நுட்பம் உச்சத்தில் - ஓங்கி வளர்ந்து வரும் யுகத்திலா இப்படி நடப்பது?
துப்புரவுத் தொழிலாளர்களையெல்லாம் மாற்றுத் தொழிலாளர்களாக்கிட போதிய பயிற்சி தந்து, அவர்களது பொருளாதார வசதி குறையாமல், வாழ்வாதாரத்திற்கும் போதிய உத்தரவாதத்தினை அளிப்பது அவசர அவசிய மாகும்!
68 ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகும் இந்நிலையா?
68 ஆண்டு சுதந்தரத்திற்குப் பிறகும் மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமப்பது - இதற்கென ஒரு தனி ஜாதி - கீழ்ஜாதி வேறு எந்த சுதந்திர நாட்டிலாவது - உலகில் உண்டா? இதைவிட பெருத்த தேசீய அவமானம் வேறு உண்டா?
இதனை இந்திய நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் இல்லாது ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திட்டம் தீட்ட வேண்டும்.
தொழில் நுணுக்க முறைகளைப் பயன்படுத்தி - இந்தக் கழிவுகளிலிருந்து பயனுறு பயன் (Recycling Process) முறையில்  கோப்பர்காஸ் பல நிறுவனங்கள் செய்கின் றனவே! ஙிவீஷீ நிணீ முறைகளையெல்லாம் செய்யலாமே!
அந்தப் பணிகளில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர் களைக்கூட, அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ற நிலை இருந்தால்கூட, பயிற்றுவித்து, பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட வேண்டும்.
இன்று வெளிவந்த ஒரு தகவல்!
இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவு களை அகற்றும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கி, நேற்று வரை நடந்துள்ளது.
அதில் 200 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 100 பேர் மட்டுமே அந்தப் பணி செய்வோராகக் கண்டறியப் பட்டுள்ளனராம்.
ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் அடிப்படையில் சென்னையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் 1,500 பேர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது வெளியாகி உள்ளதே!
மாற்றுப் பணிகள் தருக!
அந்த 1500 பேர்களில் தற்போது 100 பேர் என்று முரணான தகவல்; இதைச் செம்மைப்படுத்தி அவர்கள் அப்பணியை மனிதக் கழிவினை  சுமக்கும் பணிக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி,  அவர்களை மாற்றுப் பணியாளர்களாக்கிட மாநகராட்சியும் தமிழக அரசும் முன்வர வேண்டும்.
திராவிடர் கழகம் ஒத்துழைக்கும்
இதனை ஒழிக்க நமது இயக்கம் தேவைப்பட்டால் அறப் போராட்டத்திலும், விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபடும் என்பதை அறிவித்துக் கொள்ளுகிறோம்.

கி.வீரமணி 
தலைவர்
திராவிடர் கழகம்

.viduthalai.in

கருத்துகள் இல்லை: