hindutamil.in : சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு, வரும் பிப்.3-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் மற்றும் கூட்டணி தொடர்பாக தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி என பேசியும், சமூக வலைதத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். காங்கிரஸாரின் இதுபோன்ற நடவடிக்கையால் திமுக தலைமை அதிருப்தியில் உள்ளது. அதே நேரத்தில், எந்த கட்சியாவது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என சொல்லுமா என அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் கருத்தை எப்படி புறந்தள்ள முடியும் என காங்கிரஸார் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தச் சூழலில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஆயத்த கூட்டம் இன்று (ஜன.17) டெல்லியில் நடைபெற இருப்பதாக கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இக்கூட்டம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தலைமையில், தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர்
முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட 17 எம்எல்ஏக்கள், 10 எம்.பி.க்கள், அகில இந்திய நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாநில தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், திமுக கூட்டணியில் அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்த இருப்பதாகவும், இதற்கு திமுக சம்மதிக்காவிட்டால் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்களை, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர்கள் அணுகி, திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு, அதிக இடம் கேட்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள், அதற்கானதரவுகள் உள்ளதா என கட்சி தலைமை கேள்வி எழுப்ப உள்ளதாகவும், இதற்கு பதில் அளிக்க ஏதுவாக கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகள், கட்சியின் இன்றைய செல்வாக்கு போன்றதரவுகளுடன் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலர் தவெகவுக்கு சென்றால்தான் இனி தமிழகத்தில் காங்கிரஸூக்கு வாழ்வு என வலியுறுத்த இருப்பதாகவும், அதற்கு தேவையான தரவுகளையும் அவர்கள் சேகரித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்க 19-ம் தேதி பொதுக்குழு, செயற்குழு சென்னையில் கூடுகிறது. இதில் தேர்தல், கட்சி வளர்ச்சி,குறித்து ஆலோசிக்க உள்ளனர். இதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்த இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக