![]() |
கொம்பனித்தெரு சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த தங்க நகைகளை திருடி அடகு வைத்த அவ்வாலயத்தின் பிரதான குருவான சதீஸ்குமாரகுருக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் திங்கட்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் முன்னிலையான கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விளக்கமளிக்கையில், கொம்பனித்தெரு ஸ்ரீசிவசுப்பிரமணியர் சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த நகை திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் முறைபாடளிக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த ஆலயத்தில் பிரதான குருக்களாக கடமையாற்றிய நபரே இந்த நகைத்திருட்டில் ஈடுபட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. ஆலயத்துக்குச் சொந்தமான நகைகள் வைக்கப்பட்ட பெட்டகத்தின் சாவியும் குறித்த நபரிடமே இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் நகைகளை கொட்டாஞ்சேனை பகுதியில் மூன்று அடகு நிலையங்களில் அடகு வைத்து சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று குறித்த பணத்தைக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று ஆலய உற்சவத்தின் போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே நகைகள் திருடப்பட்டிருந்தமை ஆலய நிர்வாகத்தினருக்கு தெரியவந்ததாக பிரதான பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்ந்து விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர் நகைகளை அடகு வைத்திருந்தமைக்கான பற்றுச்சீட்டு மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் சந்தேகநபரால் அடகுவைக்கப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர். தற்போது சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் அவரது தொலைபேசி தரவுகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபருக்கு எதிராக பயணத்தடை விதித்திருந்ததோடு, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதேவேளை மேற்படி சந்தேகநபர் சுமார் 10 வருடங்களாக அவ்வாலயத்தில் பணிபுரிந்துள்ளதுடன், கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு நகைகளை திருடி அடகுவைத்து, அப்பணத்தைக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பின்னர் நகைகளை மீட்டு நகைப்பெட்டகத்தில் வைத்துள்ளார்.
இவ்வாறு 90 முறை நகைகளை திருடி பின்னர் ஆலயத்தில் வைத்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் சம்பவத்தையடுத்து தலைமறைவாகியுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் கொம்பனித்தெரு பொலிஸார் கேசரிக்கு தெரிவித்தனர்.
![]() |


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக