சனி, 29 நவம்பர், 2014

நகராட்சி அதிமுக கவுன்சிலர்களிடையே வீரப்போர்? போர்களமான கிருஷ்ணகிரி?

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், அரங்கம் போர்க்களமாக மாறியது. காயமடைந்த ஒரு கோஷ்டியினர், சாலை மறியலில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு நிலவியது.கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம்: சீனிவாசன் (அ.தி.மு.க., கவுன்சிலர்): என் வார்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் ஆகியவற்றை, ஒப்பந்ததாரர்கள் தரமில்லாமல் கட்டுகின்றனர். கவுன்சிலர் என்ற முறையில், இதை கேட்டால் ஒப்பந்ததாரர்கள் மதிப்பதில்லை. தங்கமுத்து (தலைவர்): கட்டுமான பணிகளை, நகராட்சி அதிகாரிளை கொண்டு, தினந்தோறும் ஆய்வு நடத்தப்படும். சோபன்பாபு (அ.தி.மு.க., கவுன்சிலர்): என் வார்டில் தரமற்ற நிலையில், சமீபத்தில் போடப்பட்ட தார்ச்சாலை முற்றிலும் பழுதடைந்து விட்டது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வார்டில், பணிகளை ஒதுக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களுக்கு அதிக பணிகளை கொடுக்கிறீர்கள்.
அப்போது அ.தி.மு.க., கவுன்சிலர் மாதையன், சோபன்பாபுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம், மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சீனிவாசன், புகழேந்தி, அறிவுச்சுடர், சீனிவாசன் ஆகியோர் எழுந்து வாக்குவாதம் செய்தனர். பின்னர், மேஜை மற்றும் நாற்காலிகளை தூக்கி போட்டு உடைத்தனர்; கோபம் தணியாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட ரவுடிகளும் கவுன்சிலர்களை தாக்கினர். இதனால், கூட்ட அரங்கம் ரண களமானது. இதையடுத்து, தலைவர் தங்கமுத்து, வேண்டுமென்றே வெளியில் இருந்து ரவுடிகளை கூட்டி வந்து, தங்களை தாக்கியதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும், நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம் மற்றும் சில கவுன்சிலர்கள் சேர்ந்து, நகராட்சி அலுவலகம் எதிரே, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தாக்குதலில் காயமடைந்த கவுன்சிலர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, நகராட்சி தலைவர் தங்கமுத்து, கூறுகையில், ''மன்ற கூட்டத்தில் ஆளும்கட்சி கவுன்சிலர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால், நான் ரவுடிகளை வைத்து கவுன்சிலர்களை தாக்கியதாக, கூறுவதில் உண்மையில்லை,'' என்றார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: