சனி, 16 ஜூலை, 2011

ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்..கலைஞர் கடற்கரை வீட்டிற்கு தனியாகச் சென்றுள்ளார்.

அறிவாலயத்தில் கருணாநிதி - ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!!

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்தே திமுகவிற்கு நேரம் சரியில்லாமல் உள்ளது. 2ஜி ஊழல் பூதாகரமாக வெடித்து ராசாவும் கனிமொழியும் திஹார் சிறையில் உள்ளனர். தயாநிதி மாறனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.

சன்டிவி, கலைஞர் டிவி போன்றவையும் சிக்கலில் உள்ளன. இன்னொரு பக்கம் நில அபகரிப்பு வழக்கில் தினமும் ஒரு திமுக நிர்வாகி கைதாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை திமுக தலைமையகத்தில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் கடுப்பான கருணாநிதி தலைமையகத்தைவிட்டு வெளியேறியதாக செய்தி வெளியாகியுள்ளது,

2ஜி விவகாரம் கையாளப்படும் விதம் குறித்து ஸ்டாலின் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எப்பொழுதும் கட்சியினர் புடைசூழச் செல்லும் கருணாநிதி நேற்று ஈசிஆர் ரோட்டில் உள்ள கடற்கரை வீட்டிற்கு தனியாகச் சென்றுள்ளார். அவரது செயலாளர் கே. சண்முகநாதனும், பாதுகாவலர்கள் சிலரும் மட்டுமே அவருடன் சென்றுள்ளனர்.

குடும்ப அரசியலால் தான் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது என்று கட்சியினரே அதிருப்தியடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: