சனி, 25 ஏப்ரல், 2026

எப்படி பார்த்தாலும்.. விஜய்க்கு 8%தான்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. சொல்வது என்ன?

 tamiloneindia : மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 
முந்தைய தேர்தல்களை ஒப்பிடும்போது இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதும், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 30 வயதுக்குட்பட்டவர்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொ.செ. எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி சாதாரண கட்சிகளின் தலைவர்கள் வரை, ரிசல்ட் எப்படி இருக்கும் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மே 4-ந்தேதி வரை இந்த டென்சன் இருக்கத்தான் செய்யும்.


நேற்று இரவு திமுக ஆதரவு அதிகாரிகளிடம் முதலில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது, வாக்குப்பதிவு மற்றும் இளைஞர்களின் எழுச்சி ஆகியவை ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. வாக்களிக்க வேண்டும் என்கிற மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தான் அவர்களை வாக்கு சாவடிக்கு அழைத்து வந்திருக்கிறது. திமுக அரசின் திட்டங்களால் பலனடைந்த மகளிர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர். அவர்களின் ஆதரவு திமுகவுக்கே இருக்கிறது.
பொதுவாகவே, எவ்வளவு நல்லது செய்தாலும் ஆளும் கட்சி மீது 5 முதல் 7 சதவீத மக்களிடம் அதிருப்தி இருக்கும். இது இயல்பானதுதான். அந்த அதிருப்தி வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு போகும். அந்த வகையில், திமுக ஆட்சி மீது வெறும் 3 சதவீத மக்களுக்குத்தான் அதிருப்தி இருக்கு. அதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த 3 சதவீத வாக்குகள் அதிமுகவுக்கு போயிருக்க வேண்டியவை. ஆனால், அது இந்த முறை விஜய் கட்சிக்குப் போயிருக்கிறது.
அதேபோல, வெளியூரிலும் வெளி மாநிலங்களிலும் உள்ளவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு வந்திருக்கிறார்கள். அந்த வாக்குகள் அனைத்துமே விஜய்க்குத்தான் என எடுத்துக்கொண்டாலும் அதன் சதவீதம் என்பது மிக குறைவுதான். அதாவது, மொத்த வாக்காளர்களில் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்தவர்களை கணக்கிட்டால் அது 2 சதவீதம் பேர் தான். இவர்கள் எல்லாம் விஜய் ரசிகர்கள். ஓவரால் தமிழகத்தில் விஜய் ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களை கணக்கிட்டால் 1 சதவீதம் பேர் தான். திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளுக்கும் ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகள் சதவீதத்தில் 2 சதவீதம் விஜய்க்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிறது.
ஆக, அனைத்து கோணங்களிலும் நிகழ்ந்தவைகளையும் ஆராய்ந்து பார்த்ததில் அதிகபட்சம் 8 சதவீத வாக்குகள் தான் விஜய் கட்சிக்கு தாவுகிறது. அதனால், இந்த சதவீதத்தில் வாக்குகள் பிரியும் போது, மீண்டும் திமுக ஆட்சி தான். இதில் ஒரு சின்ன திருத்தம் இருக்கிறது. நாம் 200 இடங்களில் கூட்டணி ஜெயிக்கும் என இலக்கு வைத்திருந்தோம். அந்த எண்ணிக்கையில் தான் சற்று சறுக்கல். அதாவது திமுக கூட்டணியே 160 இடங்களைத்தான் கைப்பற்ற முடியும். இதில் திமுக மட்டுமே குறைந்த பட்சம் 135-ம் அதிக பட்சம் 140 இடங்களையும் கைப்பற்ற முடியும். இதுதான் எங்களின் ஆய்வில் கிடைத்தவை என்று ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதைக்கேட்டு, ஓகே ஓகே என்று மட்டும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோதும் இதே ரீதியில் தான் கொஞ்சம் ஏற்றத்தாழ்வுகளுடன் எண்ணிக்கை இருந்துள்ளது. அந்த வகையில் மீண்டும் திமுக ஆட்சி என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார் ஸ்டாலின்.


கருத்துகள் இல்லை: