வியாழன், 11 டிசம்பர், 2014

புதிய மொழிக் கொள்கையை உருவாக்க வேண்டும்: மாநிலங்களவையில் கனிமொழி

"மத்திய அரசு கடைப்பிடிக்கும் மும்மொழிக் கொள்கையை மறுஆய்வுக்கு உள்படுத்தி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய புதிய மொழிக் கொள்கையை உருவாக்க வேண்டும்' என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில் "கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் மொழிக் கொள்கை' என்ற தலைப்பில் கனிமொழி பேசியதாவது:
"மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கடைப்பிடிக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்' என்று மத்திய அரசு மாற்றியது. இது பற்றி பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பிய போது, அரை மனதுடன் மத்திய அரசு மன்னிப்பைக் கோரியது.

இப்போது, மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்த்ரிய வித்யாலயாக்களில் இதுவரை நடைமுறையில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த மூன்றாவது மொழி ஜெர்மனுக்கு பதிலாக சம்ஸ்கிருதத்தை போதிக்க வேண்டும் என நிகழ் கல்வியாண்டின் மத்தியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசின் அவசர முடிவால் கேந்த்ரிய வித்யாலயாக்களில் இதுவரை ஜெர்மன் மொழியை மூன்றாவது மொழியாகப் படித்து வந்த சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு, "நிகழ் கல்வியாண்டில் சம்ஸ்கிருத பாடத்துக்குத் தேர்வு நடத்தப்படாது. ஜெர்மன் மொழி பயிலும் மாணவர்கள் விருப்பப் பாடமாக அம்மொழியை தேர்வு செய்து படிக்கத் தடையில்லை என்று விளக்கம் அளித்தது. இதன் மூலம் மறைமுகமாக சம்ஸ்கிருதத்தை மூன்றாவது பாடமாக மத்திய அரசு திணிக்க முயல்வது தெளிவாகிறது.
இது குறித்து அவையில் ஏற்கெனவே விளக்கம் அளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "வட மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தென் மாநில மொழிகளை அறிய வேண்டும். தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் வட மாநிலங்களில் உள்ள மொழிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் மும்மொழிக் கொள்கை உருவாக்கப்பட்டது' என்றார். ஆனால், ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் கடந்த 30 ஆண்டுகளாக இத்திட்டம் ஏன் அமல்படுத்தப்படவில்லை?
வெகு காலம் கடந்த போதிலும் பாரதியார், திருவள்ளுவர் ஆகியோரைக் கௌரவிக்க மத்திய அரசு அண்மையில் எடுத்த சில முடிவுகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம், தமிழ் மொழி உள்ளிட்ட செம்மொழிகளை மும்மொழித் திட்ட அமலாக்கத்தின் போது ஏன் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை?
உலகமயமாக்கல் சார்ந்த இன்றைய உலகில் இந்திய மாணவர்கள் பன்மொழிப் புலமை பெற்றிருப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். எனவே, குறிப்பிட்ட ஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இந்திய மொழிகளையும், வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்கும் வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை மறுஆய்வு செய்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய புதிய மொழிக் கொள்கையை உருவாக்க வேண்டும்' என்றார் கனிமொழி. dinamani.com

கருத்துகள் இல்லை: