புதன், 15 ஜனவரி, 2020

3 நாட்களில் 32,000 பேரை குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அடையாளம் கண்ட உத்தரப்பிரதேச அரசு


BBC :இந்தியா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெறக் காரணமாக குடியுரிமை திருத்த சட்டம் இருந்தது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த 32 ஆயிரம் அகதிகளை உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவர்களது விவரங்கள் கொண்ட பட்டியலை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் நோக்கில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த, அந்த நாடுகளின் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அகதிகள் பற்றிய தகவல்களை இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்குகிறது.
ஜனவரி 10ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. இது அமலான மூன்றே நாட்களில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா பிபிசியிடம் கூறுகையில் ”குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அரசாங்கத்தால் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தகவல்கள் பலரை சென்றடைய இது உதவியது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21 மாவட்டங்களில் உள்ள அகதிகள் குறித்து பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 32 ஆயிரம் அகதிகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.




விரைந்து தயாரிக்கப்படும் குடியேறிகள் பெயர் பட்டியல் : உத்தர பிரதேசம்படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பா.ஜ.கவின் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா
ஆனால் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் அகதிகள் குறித்த தகவல்களை குறியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தும் முன்பே தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே கடந்த மூன்று நாட்களில் மட்டுமே அதிக அளவிலான அகதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க முடிந்தது என்றும் கூறப்படுகிறது.
ஆக்ரா, ரே பரேலி, கோரக்பூர் மற்றும் பிலிபித் மாவட்டங்களிலேயே அதிகமான அகதிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, குடியேறிகள் குறித்த தகவல்களையும் பெயர் பட்டியலையும் அந்த மாநில முதலமைச்சர் அலுவலகத்திற்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிவில் ரைட்ஸ் ஃபோரம் என்ற அமைப்பு, இந்தியாவின் அண்டை நாடுகளில் அகதிகள் எதிர்கொண்டதாக கூறும் பிரச்சனைகள் குறித்து ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது.




விரைந்து தயாரிக்கப்படும் குடியேறிகள் பெயர் பட்டியல் : உத்தர பிரதேசம்படத்தின் காப்புரிமை Getty Images
குறிப்பாக பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்த அகதிகள் குறித்து அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த புத்தகத்தில் இடம்பெற்ற சில அகதிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் சிலருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது .
குடியேறிகள் குறித்த தகவல்களுடன் சேர்த்து, வெளிநாடுகளில் அவர்கள் எதிர்கொண்டதாக கூறப்படும் கொடுமைகள் குறித்தும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அகதிகள் பெயர் பட்டியல் மற்றும் தகவல்களை விரைந்து சமர்ப்பிக்குமாறு உத்தரப் பிரதேச மாநில அரசாங்கம் கோரியதாக கூறப்படுகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல போராட்டங்கள் உத்தரப் பிரதேச மாநிலம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நடந்தன. அந்த போராட்டங்களின்போது ஏற்கனவே 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெறப்படாது என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறிவிட்டார்.
bbc

கருத்துகள் இல்லை: