சனி, 20 ஏப்ரல், 2013

காலாவதியான தடுப்பூசிகள் மீது மறு லேபிள் ஒட்டி விற்கப்பட்டமை கண்டுபிடிப்பு

சென்னை: காலாவதியான தடுப்பூசிகள் மீது மறு லேபிள் ஒட்டி விற்கப்பட்டது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், மறு உத்தரவு வரும் வரை கடைக்காரர்களோ, டாக்டர்களோ தடுப்பூசிகளை கையாள வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.குழந்தை பிறந்த 6, 10, 14வது மாதங்களில் டிப்தீரியா, டெட்டனஸ், ஹெபடைட்டிஸ் உள்ளிட்ட 5 நோய்கள் தாக்காமல் இருக்க ஒரே தடுப்பூசி போடுகின்றனர்.டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு மருந்து நிறுவனம் தயாரித்து சப்ளை செய்த தடுப்பூசிகள் காலாவதியாகி விட்டன. ஆனால், மறு லேபிள் ஒட்டப்பட்டு அவை கடைகளில் விற்கப்படுவதாக தமிழ்நாடு மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், மாநகரில் மொத்தம் 32 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 15,063 மருந்து பாட்டில்கள் (வயால்) கைப்பற்றப்பட்டன. இந்த மருந்து பாட்டில்களில் மேலே ஒட்டப்பட்டிருந்த லேபிளில், காலாவதியாகும் தேதி மார்ச் 2014Õ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு கீழே ஒட்டப்பட்டிருந்த பழைய லேபிளில் அந்த மருந்து மார்ச் 2013 அன்றுடன் காலாவதியாகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரே மருந்து பாட்டிலில் 2 லேபிள்களை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். டெல்லியில் உள்ள மருந்து நிறுவனம், காலாவதி தேதி மார்ச் 13 என்று குறிப்பிட்டிருந்தாலும், அந்த மருந்துகள் அதற்கு பிறகும் வீரியத்துடன் இருக்கும். எனவே, தடுப்பூசிக்கான காலாவதி தேதியை நீட்டித்து தர வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு மருந்து தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

அதன்படி, கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட தடுப்பூசி மருந்து பாட்டில்களை திரும்ப பெற்று, அதன் தரத்தை ஆய்வு செய்த பின், அதன் மீதுள்ள பழைய லேபிளை எடுத்துவிட்டு புது லேபிளை ஒட்டி சப்ளை செய்திருக்க வேண்டும். இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை என்பது அப்போது தெரிய வந்தது.

இதையடுத்து 5 நோய்களுக்கான ஒரே தடுப்பூசி மருந்தை அடுத்த உத்தரவு வரும்வரை பயன்படுத்த வேண்டாம் என்று மருந்து விற்பனையாளர்கள், மெடிக்கல் ஸ்டோர்கள், டாக்டர்களை தமிழ்நாடு  மருந்து தரக்கட்டுப்பாட்டு அலுவலக இயக்குனர் செல்வராஜ் அறிவுறுத்தி உள்ளார். tamilmurasu.org

கருத்துகள் இல்லை: