வியாழன், 1 செப்டம்பர், 2022

முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி : நாங்கள் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்’

 Kalaignar Seithigal - Lenin  : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.9.2022) கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் ஆற்றிய உரை:-
நம்முடைய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அவர்களுடைய அருமை பேத்தி, இளைஞர் அணியினுடைய மாநில துணை அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தம்பி பைந்தமிழ்ப் பாரி அவர்களுடைய அன்பு மகள் ஸ்ரீநிதி அவர்களுக்கும் – கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த பர்கூர் தொகுதியினுடைய சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மதியழகன்-திருமதி விஜயா ஆகியோருடைய அன்பு மகன் கௌசிக் தேவ் அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.


இந்த இனியதொரு மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று மணவிழாவை நடத்திவைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

வரவேற்புரையாற்றிய நம்முடைய பொங்கலூர் பழனிசாமி அவர்கள் உரையாற்றுகிற நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னார், 1972ஆம் ஆண்டு அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய திருமணத்தை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, நம்முடைய பொங்கலூர் பழனிசாமி அவர்களின் அருமை மகன் பைந்தமிழ்ப் பாரி அவர்களுக்கும் 1999ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு நம்மிடத்தில் இருந்திருந்தால், இந்தத் திருமணத்திற்கும் அவர்தான் தலைமையேற்று நடத்தி வைத்திருப்பார். அவர் நம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்ட காரணத்தால், இன்றைக்கு அவரிடத்திலிருந்து, அவருடைய மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலின் இந்தத் திருமணத்திற்கு வருகை தந்து, தலைமை ஏற்று நடத்தி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் குடும்பத்திலே வாரிசு, வாரிசாக இருக்கக்கூடிய அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்களோ, அதேபோல் எனக்கும் ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைக்கும், நிச்சயமாக உருவாகும், அப்படிப்பட்ட திருமணத்திற்கு நான் வருவேன், அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

நம்முடைய பொங்கலூர் பழனிசாமி அவர்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அவர் 1972ஆம் ஆண்டு தன்னுடைய திருமணத்தை நடத்திக் கொண்ட நேரத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, மீண்டும் கழகம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை ஏற்று பணியாற்றியிருக்கிறார்.

அதேபோல், இந்த மாவட்டத்தினுடைய பொறுப்பாளராக, மாவட்டத்தினுடைய செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, கழகத்திற்கு ஒரு மிகப் பெரிய சோதனை வந்த நேரத்தில், இந்த மாவட்டத்தினுடைய பொறுப்பேற்று பணியாற்றி, இந்த மாவட்டத்தில் கழகத்தை கம்பீரமாக நிலைநிறுத்திய பெருமை நம்முடைய பொங்கலூர் பழனிசாமி அவர்களுக்கு உண்டு. ஆக, அப்படிப்பட்டவருடைய இல்லத்தில், அவருடைய அருமை பேத்திக்கு நடக்கக்கூடிய இந்தத் திருமணத்தில் நாமெல்லாம் பெருமையோடு பங்கேற்க வந்திருக்கிறோம்.

அதேபோல், நம்முடைய மதியழகன் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்றைக்கு பர்கூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு நம்முடைய இயக்கத்தில் வந்து சேர்ந்தவர். திரு. ரஜினிகாந்த் அவர்களுடைய மன்றத்தில், அந்த அமைப்பில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

ஒரு நாள், என்னை வந்து இல்லத்தில் சந்தித்து, நான் இந்த இயக்கத்தில் சேரப் போகிறேன், சேர வேண்டும், அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும் என்று கேட்ட நேரத்தில், நானும் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய நம்முடைய கழக நிர்வாகிகளோடு கலந்துபேசி அதற்குப் பிறகு சொல்கிறேன் என்று சொல்லி, அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடியவர்களிடத்தில் விசாரித்த நேரத்தில், அவர் வந்தால் நிச்சயமாக நாம் சேர்த்துக் கொள்வோம், அவருக்கு ஒரு மிகப்பெரிய செல்வாக்கு இந்தப் பகுதியில் இருக்கிறது, நல்ல உழைப்பாளி, எல்லோரிடத்திலும் சிறப்போடு, அன்போடு, பாசத்தோடு பழகக்கூடியவர். அவர் வந்தால் கழகத்திற்கு ஒரு நல்வரவாக, கழகத்திற்கு மேலும் வலு சேர்க்கக்கூடிய வகையில் நிச்சயம் அமையும் என்று எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள்.

அவைகள் எல்லாம் பொய்யாக இல்லை, அது உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய மதியழகன் அவர்கள் இயக்கத்தில் சேர்ந்து, மிகச் சிறப்பாக பணியாற்றி, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அவரும் ஒரு துணையாக இருந்த பணியாற்றியிருக்கிறார், பாடுபட்டிருக்கிறார், துணை நின்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.

அதற்குப் பின்னால், பர்கூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நின்று அதிலும் அவர் வெற்றி பெற்று, இன்றைக்கு அந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக அந்தத் தொகுதி மக்களின் உள்ளத்திலே அவர்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு பணிகளையெல்லாம் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: