ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

அமெரிக்காவை விட சிறந்த திட்டம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் – ஸ்டாலின்

வேலூர்: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 1.4 கோடி குடும்பத்தினர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அமெரிக்காவின் சுகாதாரத் திட்டத்தை விட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மிகச் சிறப்பானது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

'சிஎம்சி மருத்துவமனையை எந்த நோக்கத்துக்காக ஐடா ஸ்கடர் உருவாக்கினாரோ, அதுபோல தான் கலைஞர் காப்பீட்டு திட்டமும் தொடங்கப்பட்டு உள்ளது.

நோய் என்பது பணக்காரன், ஏழை என்று பார்த்து வருவதில்லை. பணக்காரர்கள் பணம் செலுத்தி உயர் சிகிச்சைகளை பெருகின்றனர். அதுபோல தரமான உயர் சிகிச்சைகள் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது கலைஞர் காப்பீட்டு திட்டம்.

தமிழக அரசு இந்த திட்டத்துக்காக ரூ.517 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் ஒரு கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்து 532 குடும்பங்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அதில் ஒரு கோடியே 31 லட்சத்து 46 ஆயிரத்து 566 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற 567 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் இணைய பல மருத்துவமனைகள் தயக்கம் காட்டியது உண்மை தான்.

தயக்கத்துக்கு காரணம் என்ன என்றால், இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என அவர்கள் நினைத்தது தான். ஆனால் இந்த திட்டம் வெற்றி பெற்று விட்டதால் தற்போது போட்டி போட்டு கொண்டு பல மருத்துவமனைகள் திட்டத்தில் சேர வருகிறார்கள்.

அண்மையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். அங்கு காப்பீட்டுக்கான தொகையை தொழிலாளர்களுக்காக தொழிலதிபர்கள் செலுத்த வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் காப்பீட்டு தொகையை மக்களும் செலுத்த வேண்டியது இல்லை, நிறுவனங்களும் செலுத்த வேண்டியது இல்லை. அரசே செலுத்திவிடுகிறது' என்றார்.

கருத்துகள் இல்லை: