ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

மதுரை, நாகை மாவட்டங்கள் பிரிப்பு: அமைச்சர்கள் (ஆர் எஸ் எஸ்) ஆலோசனை

மதுரை, நாகை மாவட்டங்கள் பிரிப்பு: அமைச்சர்கள்மின்னம்பலம் : மதுரை, நாகை மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிர்வாக வசதிக்காகப் பெரிய மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென கோரிக்கைகள் அண்மைக்காலமாக அதிகம் எழுந்துள்ளது. இதையடுத்து விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியும், திருநெல்வேலியைப் பிரித்து தென்காசியும் தனி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தச் சூழலில் முதல்வர் தனது சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவை புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கிடையே தஞ்சையை இரண்டாகப் பிரித்து, கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் நாகையிலிருந்து பிரித்து மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மயிலாடுதுறை, சீர்காழி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவருகிறது.

இதுதொடர்பாக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று (ஆகஸ்ட் 17) செய்தியாளர்களிடம் பேசுகையில், “மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அடுத்த ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார். இதுபோலவே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “தமிழகத்தில் ஏழு புதிய மாவட்டங்களை உருவாக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார். மக்கள் விருப்பப்படி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தைப் பிரிப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்” என்று தகவல் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்த நிலையில், இதுதொடர்பாக பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “கோபிசெட்டிபாளையத்தில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தால், புதிய மாவட்டத்தை உருவாக்க நான் கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறியிருந்தார். இதை ஈஸ்வரன் கடுமையாக விமர்சித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக