ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பிரதமரின் ஹெலிகாப்டரில் வந்த கறுப்பு பெட்டி! கறுப்பு பண பெட்டி?

பிரதமரின் ஹெலிகாப்டரில் வந்த கருப்பு பெட்டி!மின்னம்பலம் : கடந்த வாரம் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட கருப்பு நிறப் பெட்டியில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
கடந்த 9ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னதாக, சித்ரதுர்கா ஹெலிபேட்டில் மோடி வந்த ஹெலிகாப்டர் இறங்கியவுடன், அதில் இருந்து ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றனர் சிறப்புப் பாதுகாப்புப் படையினர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகனமொன்றில் அந்த பெட்டியை ஏற்றி அனுப்பினர்.
இது பற்றி, நேற்று (ஏப்ரல் 13) காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதளப் பக்கங்களில் தகவல் வெளியானது. கர்நாடக காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா, இது குறித்து 14 நொடிகள் ஓடும் வீடியோவொன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பெட்டி ஏற்றப்பட்ட இனோவா கார் யாருடையது என்றும், இது பற்றி தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் மோடி மற்றும் ஹெலிகாப்டர் தொடர்பான காட்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. ஆனால், அந்த பெட்டியைத் தூக்கிச் செல்ல வீரர்களே சிரமப்படுவது நன்றாகத் தெரிந்தது.

இந்த விவகாரம் குறித்து, கர்நாடக காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் அந்த பெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும், அதில் என்ன இருந்தது என்று விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. “பிரதமரின் பாதுகாப்புக்காக ஹெலிகாப்டரில் வந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் அந்த வீடியோவில் உள்ளனர். ஹெலிகாப்டர் தரையிறங்கிய பிறகு, அவர்கள் கருப்பு நிறப் பெட்டி ஒன்றை தனியார் வாகனத்தில் ஏற்றுகின்றனர். அது பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமானதல்ல” என்று தெரிவித்துள்ளார் கர்நாடக காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவரான ஆனந்த் சர்மா.
பிரதமர் நரேந்திர மோடி சித்ரதுர்காவில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, பாலகோட் தாக்குதல் குறித்த ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி கேட்பது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக