ஞாயிறு, 10 மார்ச், 2019

18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல்.. 21 அல்ல... தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்பு

tamil.thehindu.com/ தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி 2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் குறித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு சென்னையில் அறிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் அதன் பிறகே அங்கு தேர்தல் நடைபெறும்.
மீதமுள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக