ஞாயிறு, 15 அக்டோபர், 2017

பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு இந்திரா காந்தி விருது - சோனியா வழங்குகிறார்


maalaimalar :தமிழ்நாட்டை சேர்ந்தவர், பிரபல கர்னாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு 2015-2016 ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு இந்திரா காந்தி விருது - சோனியா வழங்குகிறார்
புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்தவர், பிரபல கர்னாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணா (வயது 41). இவருக்கு 2015-2016 ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை விருது ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் மோதிலால் வோரா, டெல்லியில் நேற்று வெளியிட்டார். டி.எம். கிருஷ்ணா, ஆரம்ப கால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடமும், பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடமும் பெற்றார்.
மேலும், பிரபல இசை மேதை செம்மங்குடி சீனிவாச அய்யரிடம் 7 ஆண்டு காலம் இசைப்பயிற்சி பெற்றுள்ளார். டி.எம். கிருஷ்ணா, தீவிரமான கர்னாடக இசைப்பாடகராக மட்டுமல்லாது, இந்த இசையை கற்றுத்தரும் ஆசிரியராகவும் திகழ்கிறார். உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடுகிறார். இசை சொற்பொழிவுகளும் ஆற்றி வருகிறார். இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது, பாராட்டு சான்றிதழும், ரூ. 10 லட்சம் ரொக்கப்பரிசும் கொண்டதாகும். டி.எம். கிருஷ்ணா, ஏற்கனவே ரமோன் மகசேசே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக