ஞாயிறு, 18 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் நண்பர்கள் உறவினர்களுக்கு தொடர்ச்சியாக குழி பறித்து பிரித்த நடராஜன் -சசிகலா தம்பதிகளின் திட்டம் போட்டு திருடிய கதை !

1982-முதல் ஜெயலலிதாவுக்கு நட்பாக இருந்த சசிகலா, ஆரம்பத்தில் போயஸ் கார்டன் வீட்டில் நிரந்தரமாகத் தங்கவில்லை. அலுவலகத்துக்குப் போவதுபோல்தான், போயஸ் கார்டனுக்குப் போய் வந்தார்; பிறகு,  போயஸ் கார்டன் வீட்டில் இரவில் தங்க ஆரம்பித்தார்; பிறகு, இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து அங்கேயே இருக்கப் பழகினார். யாரையும் எளிதில் நம்பாத ஜெயலலிதா எதற்காக சசிகலாவை இவ்வளவு நம்பினார், அவருக்கு இவ்வளவு இடம் கொடுத்தார்? என்பது பலருக்கும் புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடை, பெங்களூரு ‘பிரைவேட்’ மருத்துவமனைக்குள் ஒளிந்து இருந்தது. அது தனி அத்தியாயம்.  
வலம்புரிஜான், மாதவன் நாயர், ஜெயமணி!
சசிகலா ஜெயலலிதாவின் வீட்டில், அதிகமாகத் தங்க ஆரம்பித்த நேரத்தில், அவருக்கு அதில் கொஞ்சம் தொந்தரவுகள் இருந்தன. சசிகலாவுக்கு முன்பே, ஜெயலலிதா வீட்டுக்குள் வந்தவர்கள், போயஸ் கார்டனில் சசிகலாவைவிட சுதந்திரமாக வலம் வந்தனர்; அவர்கள், ஜெயலிதாவின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமானவர்களாக இருந்தனர்;
ஊழியர்கள் என்பதைத்தாண்டி, ஜெயலலிதாவோடு ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு ஆத்மார்த்தமான பிணைப்பு இருந்தது; இது சசிகலாவுக்கு சங்கடமாக இருந்தது. இவர்களைத் தொந்தரவுகளாக பார்த்தார் சசிகலா. சசிகலாவால், தொந்தரவாகப் பார்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர், மாதவன் நாயர். சந்தியா காலத்தில் இருந்து, ஜெயலலிதா குடும்பத்தோடு இணைப்பில் இருந்தவர். 35 வருட குடும்பப் பழக்கம்.
சசிகலா
ஜெயலலிதாவை தூக்கி வளர்த்ததை பெருமையாகக் கருதினால், மாதவன் நாயர் அந்தப் பெருமைக்கு உரியவர்.  அதனால், போயஸ் வீட்டு, வீட்டு வரவு செலவுக் கணக்குகளைப் பார்க்கும் பொறுப்பை, மாதவன் நாயரிடம் ஜெயலலிதா ஒப்படைத்திருந்தார். அதுபோல், ஜெயமணி என்று ஒரு டிரைவர் நீண்ட நாட்களாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். சேடபட்டி முத்தையா சிபாரிசு செய்து அனுப்பிய ஆள் அவர். அதுபோல, எம்.ஜி.ஆர் நடத்திய ‘தாய்’ பத்திரிகையின் ஆசிரியர் வலம்புரிஜானும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்துபோகும் அதிகாரம் பெற்றவராக இருந்தார். பொது விஷயங்கள், உலக வரலாறுகள், ஜெயலலிதாவின் மேடைப் பேச்சுகளுக்குத் தேவையான குறிப்புகள் எடுத்துத் தருவது, பல நேரங்களில் ஜெயலலிதாவுக்கு மேடைப் பேச்சுக்கான உரைகளை எழுதித் தரும் வேலைகளை, வலம்புரிஜானிடம் எம்.ஜி.ஆர் ஒப்படைத்திருந்தார்.   ஜெயலலிதாவுக்கும் வலம்புரிஜான் மீது ஒரு பிரமிப்பும் மரியாதையும் இருந்தது. வலம்புரிஜான், அந்தக் காலத்திலேயே ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், தமிழக சட்டசபை மேல்சபை உறுப்பினராகவும் (எம்.எல்.சி) இருந்தவர். ஜெயலலிதாவோடு சேர்ந்து டெல்லிக்கு ராஜ்யசபா உறுப்பினராக சென்று வந்தவர். இவர்களைப் போல, இன்னும் பல ஊழியர்கள் போயஸ் கார்டனில் நிரந்தரமாகவும், அவ்வப்போது வந்து ஊழியம் செய்துவிட்டுப் போகிறவர்களாகவும் இருந்தனர். இவர்களைக் களையெடுக்க நினைத்தார் சசிகலா. நடராஜன் அதற்கான களங்களைத் தயார் செய்தார்.  

36 ஆயிரம் ரூபாய் ஒரு காரணமா?
மாதவன் நாயருக்கு முதலில் குறிவைக்கப்பட்டது. அவர்தான், போயஸ் கார்டனுக்குள், சசிகலாவின் சுதந்திரத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தவர். காசு விஷயத்திலும், மாதவன் நாயர் கறார் பேர்வழி. எனவே, அவரைக் களையெடுப்பதுதான் முதல்வேலை என்று நடராஜனிடம் சொன்னார் சசிகலா. மாதவன் நாயரைத் தோண்ட ஆரம்பித்ததில், அவருடைய வங்கிக் கணக்கு மட்டும் சிக்கியது. அதில், சொந்தக் கணக்கில் மாதவன் நாயர், 36 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். அதை ஒரு விஷயமாக்கி, ஜெயலலிதாவிடம் கொண்டுபோனார் சசிகலா. “மாதவன் நாயர் தப்புக் கணக்கு எழுதி, நீங்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தைச் சுரண்டுகிறார். அவருடைய வங்கிக் கணக்கில் 36 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.
அவருக்கு எங்கே இருந்து வந்தது இவ்வளவு பணம்” என்று  ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்பினார் சசிகலா. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சியில் ஜெயலலிதா இறங்கவில்லை; மாதவன் நாயரிடமும் விளக்கம் கேட்கவில்லை; 35 வருடங்கள் வேலை பார்ப்பவர் கணக்கில் 36 ஆயிரம் இருக்காதா? என்று யோசிக்கவும் இல்லை. மாறாக, “மாதவன் நாயரை இனிமேல் வரவேண்டாம்” என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா. அதுபோல, டிரைவர் ஜெயமணி, “வீட்டுக்குள் நடப்பதை வெளியில் பேசிக் கொண்டு திரிகிறார்; ஜானகி அம்மாளுக்காக, உங்களை வேவு பார்க்கும் ஆள் தான், இந்த ஜெயமணி. அதற்காகத்தான், சேடபட்டி முத்தையா ஜெயமணியை இங்கு வேலைக்கு சேர்த்துள்ளார்” என்று ஜெயலலிதாவிடம் சொன்னார் சசிகலா. அதோடு, ஜெயமணியின் வேலையும் காலி. அதற்குப் பிறகு, அந்த இடங்களுக்கு புதிய ஆட்கள் கொண்டுவரப்பட்டனர். அவர்கள், நடராஜன் அனுப்பிய ஆட்கள். புதிய ஆட்களுக்கு ஜெயலலிதா வீட்டில் வேலையும் சம்பளமும் ஏற்பாடு செய்து கொடுத்தார் நடராஜன். அவர்கள், அதற்குப் பதிலாக சசிகலாவிடம் விசுவாசத்தையும் மரியாதையையும் காட்டினார்கள். 
வலம்புரிஜானும் ஒரு அட்டைப்படமும்  

வலம்புரிஜானைப் பொறுத்தவரை, அவரும் சாதரண ஆள் கிடையாது. அரசியல் அறிந்தவர்; அதற்குள் இருக்கும் அபாயங்களை உணர்ந்தவர். அவரை ஜெயலலிதாவின் வட்டத்தில் இருந்து பிரிக்கவேண்டுமானால், வேறு வகையில் வேலை பார்க்க வேண்டும் என்று யோசித்தார் நடராஜன்.  அதற்கு கே.ஏ.கே-வின் தயவை நாடினார் நடராஜன். அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு, சினிமாவில் பலம், ஆர்.எம்.வீரப்பன் என்றால், அரசியலில் பலம், கே.ஏ.கே என்பார்கள். அவருக்கே தெரியாமல், அவர் மூலம் காய்களை நகர்த்தினார் நடராஜன். அந்தக் காலகட்டத்தில் நடராஜன், கே.ஏ.கே-வின் ஆளாக வலம் வந்தவர் என்பது இங்கே குறிப்பிட வேண்டியது.  வலம்புரிஜானுக்கு எதிரான செய்திகளை கே.ஏ.கே நடராஜன் மெல்ல மெல்ல கடத்திக்கொண்டே இருந்தார். அந்தச் செய்திகள், கே.ஏ.கே மூலம் ஜெயலலிதா, ஜானகி, எம்.ஜி.ஆர் என்று எல்லாத் திசைகளுக்கும் போனது. அதைத்தான் எதிர்பார்த்தார் நடராஜன். 
அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு பல நாட்கள் இருவரும் பேசாமல் இருந்தனர். அவர்களைச் சமாதானப்படுத்த விரும்பிய சிலர், வலம்புரிஜான் பொறுப்பில் இருந்த, ‘தாய்’ பத்திரிகையில் ஒரு அட்டைப்படத்தை பிரசுரிக்கச் சொன்னார்கள். ‘எம்.ஜி.ஆர்-ஜானகி’ இளமைக்காலத்தில் சேர்ந்து எடுத்த படம் அது. நல்ல விஷயம்தானே என்று நினைத்த வலம்புரிஜான், அந்தப் படத்தை அட்டையில் வைத்தார். இதே நேரத்தில், ஜெயலலிதாவுக்கும் ஜானகி அம்மாளுக்கும் கடும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த விபரத்தை வலம்புரிஜான் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், அதைக் கச்சிதமாக கவனத்தில் வைத்திருந்த நடராஜன், ‘தாய்’ அட்டைப்படத்தை ஜெயலலிதாவின் கவனத்துக்கு சசிகலா மூலம் கொண்டுபோனார். அதோடு, “வலம்புரிஜான் ஜானகி அம்மாளின் ஆள். அதனால்தான், எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாளும் பேசிக் கொள்ளாத இந்த நேரத்தில் இப்படி ஒரு அட்டைப் படத்தைப்போட்டு, அவர்களை சமாதானம் செய்கிறார். அதன்மூலம் உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடைவெளியை அதிகரிக்கப் பார்க்கிறார்” என்று ஒரு விளக்கத்தையும் கொடுத்தார். ஆத்திரமடைந்த ஜெயலலிதா, வலம்புரிஜானைத் தொடர்பு கொண்டு திட்டித் தீர்த்தார். அதில் குழம்பிப்போன வலம்புரிஜான், நமக்கு எதற்கு வம்பு என்று நினைத்து அடுத்த வாரம் ஜெயலலிதாவின் போட்டோ ஒன்றை அட்டையில் போட்டார். ஆனால், விடவில்லை நடராஜன். அதையும் பிரச்னை ஆக்கினார்.
இந்தமுறை ஜெயலலிதா அட்டை படத்தை, ஜானகி அம்மாள் கவனத்துக்கு கொண்டுபோனார். அதோடு, “வலம்புரிஜான் எப்போதும் ஜெயலலிதாவின் ஆள்; ஜெயலலிதாவை அரசியலில் வளர்து எடுக்க துடிக்கிறார்; ஜெயலலிதாவுக்கு மேடைப் பேச்சுக்களை இவர்தான் எழுதித் தருகிறார்; ஜெயலலிதாவை கட்சியில் செல்வாக்கு மிக்கவராக மாற்றவே, ‘தாய்’ பத்திரிகையில் அவர் படத்தைப் போட்டுள்ளார்” என்று அங்கும் ஒரு விளக்கத்தை கொடுத்தார். அதோடு நிறுத்தவில்லை, ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு, “உங்கள் படத்தை மிக மோசமான தெளிவில்லாத ‘லே-அவுட்’ செய்து பத்திரிகையில் வலம்புரிஜான் பிரசுரித்துள்ளார். இதன்மூலம், உங்களை அவமானப்படுத்த நினைக்கிறார்” என்று ஜெயலலிதாவுக்கும் ஒரு தகவலைச் சொல்லி வைத்தார். இப்படியாக, வலம்புரிஜானுக்கு எதிராக தொடர்ந்து நடராஜன் காய்களை நகர்த்திக் கொண்டே இருந்தார். நடராஜன் பரப்பிய இந்தச் செய்திகள் மின்னல் வேகத்தில் சென்று  சேர்ந்தன.
இந்த விஷயத்தில், பத்திரிகைக்கு செய்தி ஆசிரியராக இருந்த வலம்புரிஜான், ஒரு பி.ஆர்.ஓ-விடம் தோற்றுத்தான் போனார். நடராஜன் பரப்பிய செய்திகளுக்கு, விளக்கம் கொடுக்கவே, வலம்புரிஜானுக்கு நேரம் சரியாக இருந்தது. ஜெயலலிதாவுக்கும் அவர் மேல் இருந்த நம்பிக்கை போனது. ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவே, வலம்புரிஜானுக்கு எதிராக எம்.ஜி.ஆரிடம் பேசவும், அவரை மட்டம் தட்டி வைக்க எம்.ஜி.ஆரோடு சண்டை போடவும் செய்தார். நடராஜனின் உள்ளடி வேலைகள் அந்தளவுக்கு வேலை செய்தன. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருப்பவர்களை கணக்கெடுப்பது, அவர்களுடை பலவீனங்களை புரிந்து கொள்வது, தவறுகளை தெரிந்து கொள்வது, அதை ஜெயலலிதாவிடம் கச்சிதமாகக் கொண்டுசேர்ப்பது, அவர்களால், ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படப்போகிறது என்று பீதியைக் கிளப்புவது என்று நடராஜன் செயல்பட்டார்.  நடராஜனின் இந்த செய்வினைகளை, தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயலலதாவுக்கு நெருக்கமானவர்கள் முடங்கிப்போனார்கள். போயஸ் கார்டன் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் இதே வேலையைத்தான் நடராஜன் பார்த்தார். 
நடராஜன் வெட்டிய பள்ளத்தில் திருநாவுக்கரசர், சேலம் கண்ணன், ஆர்.எம்.வீரப்பன் என்று வரிசையாக பலர் வீழ்ந்தனர். 
(கதை தொடரும்)  விகடன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக