ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சசிகலா புஷ்பா :அப்போலோ CCTV காட்சிகளை வெளியிடுங்கள்!” -“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லையா?

.தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக விளம்பரப் படுத்திக்கொள்ளும் சசிகலாவை எதிர்த்தும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் சசிகலா புஷ்பாதான் இப்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத காரியத்தைத் தைரியத்துடன் செய்திருக்கும் சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த சிறப்பு பேட்டி.
‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறீர்களே?’’
‘‘அம்மாவின் மரணத்தில் ஏதோ ஒன்று மக்களுக்குத் தெரியக் கூடாது என மறைக்கப் பார்க்கிறார்கள். அப்படி எந்த மர்மமும் இல்லையென்றால் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் ஒளிப்பதிவை மக்களுக்குக் காட்டலாமே. ஒரு சிலரின் அரசியல் ஆசைக்காக ஏதோ ஒரு பெரிய திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை செய்வார்கள். ஆனால், உண்மை என்னவென்று மக்களுக்கு சொல்லமாட்டார்கள். கேட்டால், பலர்... அம்மாவைப் பார்த்துப் பேசினார்கள் என்று கதை சொல்கின்றனர். அவருடைய அருகில் இருந்தது சசிகலா ஒருவர் மட்டும்தான். வேறு யாரும் இரண்டாம் தளத்துக்கே அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்று சசிகலா மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், அவர்கள் சொல்லமாட்டார்கள். சிலர், பதவியைக் கைப்பற்ற அம்மாவுக்கு எதிராகச் சதிச் செயல் செய்திருக்கின்றனர். அதை வெளிக்கொண்டு வரவேண்டும். மக்களுக்கு உண்மையைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான், நீதி விசாரணை நடத்தச் சொல்லி வழக்குத் தொடுத்து இருக்கிறேன்.’’ 
‘‘எதற்காக அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்துள்ளீர்கள்?’’
‘‘சசிகலா யார்... அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்? அம்மா உயிரோடு இருக்கும்போது... ‘எனக்குப் பிறகு நீதான் கட்சியைப் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்று சொன்னார்களா? சசிகலாவையும், அவருடைய குடும்பத்தைப் பற்றியும் அம்மாவுக்குத் தெரிந்திருந்த காரணத்தினால்தான், கட்சியில் ஒரு கவுன்சிலர் பதவிகூட கொடுக்கவில்லை. ஏனென்றால், சசிகலாவும் அவரின் குடும்பத்தார்களும் பணமே குறியாக இருப்பவர்கள்; சதிச் செயல்கள் செய்பவர்கள். அதனால்தான் அவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஒருவேளை, சேர்த்தால் கட்சியை அழித்துவிடுவார்கள் என்று அம்மாவுக்கு தெரியும். ஆகவேதான், கட்சியைவிட்டுத் தள்ளியே வைத்திருந்தார். அவ்வளவு ஏன்? சசிகலாவே, ‘என் குடும்பம் அம்மாவுக்குச் சதி செய்தது’ என அறிவித்திருக்கிறார். இப்போது அம்மா இல்லை என்றதும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியேற்கப் பார்க்கிறார்; போயஸ் கார்டனை வளைத்துப்போடப் பார்க்கிறார். நியாயமாகப் பார்த்தால்... ‘அம்மாவின் நினைவு இல்ல’மாக போயஸ் கார்டன் மாற்றப்பட வேண்டும். ஆனால், அந்தக் கொள்ளைக்காரக் கும்பல்... போயஸ் கார்டனை தங்கள் சொத்தாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது. இந்தச் சதிகாரக் கும்பலின் சதிச் செயல்களைப் பார்த்து நிச்சயமாக அம்மாவின் ஆத்மா சாந்தி அடையாது. அதனால்தான், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறேன்.’’
“அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள், சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவதற்கு ஆதரவு தருகிறார்களே?’’
‘‘அவர்களுக்கு பதவி மட்டும்தான் குறிக்கோள். அதனால்தான் அப்படிப் பேசுகிறார்கள். உண்மையிலேயே, அம்மா மீது பற்று இருந்திருந்தால்... ‘இனி கட்சியை நல்ல முறையில் பாதுக்காக்க வேண்டும்’ என்று நினைத்திருப்பார்கள். இப்படி கட்சியை அழிவின் பாதையில் கொண்டு செல்லமாட்டார்கள். அம்மா உயிரோடு இருக்கும்போது நன்றாக நடித்து இருக்கிறார்கள். இப்போது உண்மையான குணம் வெளிவருகிறது. இன்னும் சில எம்.எல்.ஏ-க்கள் வெள்ளை காகிதத்தில் ஏன், எதற்கு என்றுகூட தெரியாமல் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள். அந்தக் காரணத்தால் மிரட்டப்பட்டும் வருகின்றனர்.’’
‘‘எம்.எல்.ஏ-க்கள் மிரட்டப்படுகிறார்களா?’’
‘‘ஆம். ‘கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர், அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தேர்தலில் நிற்கக் கூடாது’ என்று பைலா சட்டம் சொல்கிறது. ஆனால், அந்த பைலா சட்டம் தேவை என்றால்... கழக உறுப்பினர்களால் மாற்றத்துக்கு உட்படும். இப்போது, வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு... ‘நாங்கள் சொல்லும்படிதான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று எம்.எல்.ஏ-க்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.’’
‘‘ ‘இதுவரை அதிகாரபூர்வமாக பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டும்’ என்று சசிகலா சொல்லவில்லையே?”
‘‘எல்லாம் நடிப்பு. இவர்களே, அவர்களுடைய  ஆளுங்ககிட்ட சொல்லி கழக பொதுச்செயலாளர்னு விளம்பரப்படுத்தச் சொல்வார்களாம். யாராவது கேட்டால், ‘எனக்குப் பதவி ஆசை இல்லை’ என்று சொல்வார்களாம். மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்.’’
‘‘பொதுமக்கள் பலரும், வெளிமாநில அ.தி.மு.க ஆதரவாளர்களும் சசிகலாவை எதிர்க்கிறார்கள்? அப்படியிருக்கும்போது... சசிகலா, பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்... அ.தி.மு.க. பின்னடவைச் சந்திக்க வாய்ப்புள்ளதே?’’
‘‘அதைத்தான் முதலிலேயே சொன்னேன். இவர்கள், கட்சியை வளர்க்க வரவில்லை... அழிக்க வந்திருக்கிறார்கள்.’’
‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ‘சசிகலா அத்தைக்கு ஆதரவு அளிக்கிறேன்’ என்கிறார். ஆனால், அவருடைய அண்ணன் மகள் தீபாவோ, கட்சிப் பணிகள் செய்யப்போவதாக ஒரு கருத்து வைரல் ஆகிறதே?”
‘‘அது அவர்களின் சொந்தக் கருத்து. அதில், ஏதும் நான் சொல்வதற்கில்லை. என்னைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க நன்றாக வளர வேண்டும். அதற்கு சசிகலா, அ.தி.மு.க-வைவிட்டு வெளியேற வேண்டும்.’’
- ஜெ.அன்பரசன்  விகடன்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக