ஞாயிறு, 25 டிசம்பர், 2016

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை.... படகுகள் விடுவிக்க முடியாதாம் ..இலங்கை அமைச்சர் அறிவிப்பு

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய (தமிழக) மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையன்று மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா, என்பதனை தன்னால் உறுதி செய்ய முடியாதபோதும் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார். இதற்கு அடுத்தபடியாக சட்டமா அதிபர் திணைக்களமே தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கின்றபோதும் மீன்பிடி படகுகளை எச்சந்தர்ப்பத்திலும் விடுவிக்க தயாரில்லை என்றும் அமைச்சர் உறுதியாகத் தெரித்துள்ளார். இலங்கை கடற்பரப்பை அத்துமீறிய குற்றச்சாட்டின்பேரில் தமிழக மீனவர்கள் மூன்று கட்டங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கமைய தற்போது 36 தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி இலங்கை- இந்திய மீனவர்களின் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவதற்கு அரம்பத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது. இப்பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பில் இதுவரை இந்தியாவிலிருந்து எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை எனக்கூறிய அமைச்சர், இலங்கையைப் பொறுத்தவரை இந்த பேச்சுவார்த்தைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக