ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மத்திய அமைச்சரவையில் இடம் பெறப்போவது யார் யார்?பட்டியல் தயாரிப்பில் சோனியா, மன்மோகன்

 தி.மு.க.,வில் யாருக்கு அடிக்குது யோகம்?
மத்திய அமைச்சரவையில், அதிரடி மாற்றங்களைச் செய்ய, பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர், சோனியாவும் தயாராகி விட்டனர். அடுத்த பொதுத் தேர்தலுக்கு, முழு வீச்சில் தயாராகும் வகையில், அமைச்சர் பொறுப்பிலுள்ள பலரை வெளியேற்றவும், வெளியே உள்ள பலரை, உள்ளே கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். இந்த வார கடைசிக்குள், மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ், நேற்று முன்தினம் விலக்கிக் கொண்டது. இருந்தாலும், "மத்திய அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்' என, உ.பி.,யின் சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் அறிவித்து விட்டதால், காங்கிரஸ் கட்சியினர் கலக்கம் அடையவில்லை.அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில், நிறைய இடங்கள் காலியாக இருப்பதால், அவற்றில், மாற்றங்கள் கொண்டு வருவதற்கான, நடவடிக்கைகளில், பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இறங்கி விட்டனர்.


இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அமைச்சரவையில், சரியாக செயல்படாத சில அமைச்சர்களை வெளியேற்றவும், பல புதிய முகங்களை, உள்ளே கொண்டு வரவும் தீர்மானித்து, அதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில், மன்மோகன் சிங்கும், சோனியாவும் தீவிரமாக உள்ளனர். அனேகமாக, அமைச்சரவை மாற்றம், இந்த வார கடைசிக்குள் இருக்கலாம்.இந்த மாற்றத்தின் போது, வெளியுறவு அமைச்சராக உள்ள கிருஷ்ணாவின் பதவி பறிக்கப்பட்டு, அவர் கர்நாடக அரசியலுக்கு அனுப்பப்படுகிறார். அவருக்குப் பதிலாக, புதிய வெளியுறவு அமைச்சராக, ஆனந்த் சர்மாவோ அல்லது பஞ்சாப் கவர்னர், சிவராஜ் பாட்டீலோ நியமிக்கப்படுவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர், தற்போது, மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ஏழாவதாக, முன்னாள் இணை அமைச்சரான, சசி தரூக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரப்படுகிறது.

ஆந்திராவில், தன், பிரஜா ராஜ்யம் கட்சியை, காங்கிரசுடன் இணைத்து, பின், காங்கிரஸ் சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யான, சிரஞ்சீவிக்கு, இம்முறை மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதி. அதேநேரத்தில், கர்நாடக மாநிலத்திற்கு, பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், ராஜ்ய சபாவின் முன்னாள் துணைத் தலைவர், ரகுமான்கான் அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.மகாராஷ்டிராவைச் சேர்ந்த குருதாஸ் காமத் மற்றும் மறைந்த நடிகர் சுனில் தத்தின் மகளான பிரியா தத்துக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. ஆளும் கூட்டணியில் இருந்து, மம்தா வெளியேறியதால், மேற்கு வங்க மாநிலத்திற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்களில், அதிர் சவுத்ரி அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் தாஸ் முன்ஷியின் மனைவியான, தீபா தாஸ்முன்ஷி ஆகிய இருவரில் ஒருவர், அமைச்சராக்கப்படுவர்.

இவர்கள் தவிர, மேற்கு வங்கத்தின் தென் பகுதியைச் சேர்ந்த, பிரதீப் பட்டாச்சார்யாவுக்கும், அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை, அம்மாநில காங்கிரசின் மூத்த தலைவரும், சோனியாவுக்கு நெருக்கமானவருமான, ஜனார்த்தன் திவேதி அமைச்சராக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியின், ஊடக பிரிவு தலைவராக இருக்கும் திவேதி, அமைச்சரானால், ஊடக பிரிவு பொறுப்புக்கு, தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள, அம்பிகா சோனியோ அல்லது குலாம்நபி ஆசாத் ஆகிய இருவரில் ஒருவருக்கு தரப்படும்.

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த, தலித் சமூக தலைவரான, பி.எல்.புனியாவும், அமைச்சராகிறார். அதேபோல், காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் மணீஷ் திவாரிக்கு, இம்முறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. ராகுலுக்கு நெருக்கமானவராக கருதப்படும், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, தமிழரான மீனாட்சி நடராஜனும் புதிய அமைச்சராகிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, விருதுநகர் லோக்சபா தொகுதி, காங்கிரஸ் எம்.பி.,யான, மாணிக் தாக்கூரின் பெயர், புதிய அமைச்சர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, முன்னாள் அமைச்சர், ராம்நிவாஸ் மிர்தாவின் மகளான, ஜோதிமிர்தாவும் அமைச்சராகிறார்.உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவின் போது, முதல்வர் பதவி வழங்கப்படாததால் கோபம் கொண்டு, பிரச்னை ஏற்படுத்திய ஹரீஷ் ராவத், இணையமைச்சர் பொறுப்பில் இருந்து கேபினட் அமைச்சராகிறார்.ஜனாதிபதி தேர்தலில், தே.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டு தோல்வி கண்ட, லோக்சபா முன்னாள் சபாநாயகர், பி.ஏ.சங்மாவின் மகளான அகதா சங்மாவிற்கு பதிலாக, தேசியவாத காங்கிரஸ் சார்பில், தாரிக் அன்பவர் அமைச்சராக உள்ளார். இதுதவிர, வட கிழக்கு பகுதியைச் சேர்ந்த, முகுல்மிதிக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


தி.மு.க.,வில் யாருக்கு அடிக்குது யோகம்?

தமிழக நிலவரம் பற்றி, காங்கிரஸ் வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:தமிழகத்திலிருந்து, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, ராஜா உட்பட, தி.மு.க.,வைச் சேர்ந்த, இரு கேபினட் அமைச்சர்கள், பதவி விலகியதால், அந்த இடங்கள் காலியாக உள்ளன. இந்த இரண்டு இடங்கள், தி.மு.க.,வினர், ராஜினாமாவால், காலியானவை என்பதால், அந்தக் கட்சி தலைமை எடுக்கும் முடிவை,காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்த்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, தி.மு.க.,வைச் சேர்ந்த, டி.ஆர். பாலு, இளங்கோவன், விஜயன் ஆகியோரின் பெயர்கள் தான், பிரதமரின் பரிசீலனையில் உள்ளது. ஆனால், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் தரப்பில் இருந்து, ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு, நாகபட்டினம் தொகுதி எம்.பி., விஜயன் ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.தி.மு.க.,வில், மறைந்த முரசொலி மாறனைத் தவிர, பொதுவாக, ராஜ்யசபா எம்.பி.,க்கள் யாருக்கும், மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டதில்லை. இருப்பினும், தற்போது, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும், ராமலிங்கத்திற்கு, அமைச்சர் பதவி தர வேண்டும் என, மத்திய அமைச்சர் அழகிரி சிபாரிசு செய்வதாகக் கூறப்படுகிறது. கனிமொழியும், தன் பங்கிற்கு, கன்னியாகுமரி எம்.பி.,யான, ஹெலன் டேவிட்சன் பெயரை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

ஜனாதிபதியுடன்பிரதமர் சந்திப்பு:

மத்திய அமைச்சரவை, இந்த வார கடைசிக்குள் மாற்றி அமைக்கப்படலாம் என, செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, நேற்று, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். 45 நிமிடங்கள் நீடித்த, இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய, அரசியல் சூழ்நிலை குறித்து, இருவரும் விவாதித்ததாக, ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் வேணு ராஜாமணி கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக