திங்கள், 5 செப்டம்பர், 2011

விபசார பெண்களின் குழந்தைகளை கொன்று புதைத்த கொடூரம்! 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு


லண்டன் : இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விவசாய நிலத்தில் மிகத் தொன்மையான சுடுகாடு இருப்பதை கண்டுபிடித் துள்ளனர். இங்கிருந்து குவியல் குவியலாக குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளை கொடூரமான முறையில் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷயர், ஹாம்பிள்டன் பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் எலும்புக் கூடுகள் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்த போது மேலும் ஏராளமான எலும்புக் கூடுகள் இருப்பது தெரிய வந்தது. இப்பகுதியில் இருந்து குவியல் குவியலாக பிஞ்சு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் ரோமானிய காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் சைமன் மேஸ் கூறியதாவது: விவசாய நிலத்தில் இருந்து 97 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமே குழந்தைகளின் எலும்பு கூடுகள். குழந்தைகளின் எலும்புகள் கண்டறியப்பட்ட யூடன் வில்லா பகுதி, விபசாரம் நடந்த இடமாக இருந்துள்ளது. விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு, கொடூரமான முறையில் அவற்றை கொன்று புதைத்திருக்கின்றனர். குழந்தைகள் எல்லாம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக ஒரு கருத்து கூறப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. கருத்தடை பற்றி தெரியாததால், பிரசவ காலம் முழுவதும் காத்திருந்து, குழந்தை பெற்று அதன் பிறகு, ஈவிரக்கமின்றி அவற்றை கொன்றுள்ளனர். எல்லாம் ஏறக்குறைய ஒரே வயது குழந்தைகள் போல உள்ளன.
இவ்வாறு சைமன் கூறினார். இங்கு தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இதில் மேலும் பல தகவல்கள் தெரிய வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக