செவ்வாய், 27 செப்டம்பர், 2011

இலங்கைக்கு 1,200 கம்ப்யூட்டர்களை வழங்கிய இந்தியா

திரிகோணமலை: இலங்கையின் கிழக்கு மாகாண பகுதிகளில் உள்ள 261 பள்ளிகளுக்கு 1,250 கம்ப்யூட்டர்களை இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், தமிழ் முஸ்லீம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் வகையில், அப்பகுதிகளில் உள்ள 261 பள்ளிகளுக்கு இந்திய அரசு 1,250 கம்ப்யூட்டர்களையும், 160 லேசர் பிரிண்டர்களையும் இலவசமாக வழங்கியுள்ளது.

இலங்கையின் திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக ஆணையர் அசோக்.கே.காந்தா, பள்ளி தலைமையாசிரியர்களிடம் கம்ப்யூட்டர்களை வழங்கினார்.
பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பயன்பாட்டை கற்பிக்குமாறு தலைமை ஆசிரியார்களிடம் கேட்டு கொண்டார்.

மேலும், இலங்கையின் பரம்பரிய ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவ முறைகள் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில், இலங்கை கிழக்கத்திய பல்கலை கழகத்திற்குத் தேவையான உபகரண உதவிகளையும் இந்தியா செய்கிறது. இதற்கான உதவிகளை அசோக்.கே.காந்தா வழங்கினார்.

திரிகோணமலை-மட்டக்களப்பு இடையேயான ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், சமீபத்தில் ரயில் பெட்டிகளை இந்திய அரசு வழங்கியது. இலங்கையின் கிழக்கு பகுதியில் பஸ் போக்குவரத்தை மேம்படுத்த கடந்தாண்டு 20 பஸ்கள் வழங்கப்பட்டது. மேலும் இலங்கையில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில விதவைகளுக்கு சிறப்பு தொழிற்கல்வியை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் இந்திய அரசு உதவி வருகிறது.
ஆனால் இந்தியாவின் நேரடி நிதியுதவியை இதுவரை எந்த வகையிலும் இலங்கை அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. அதேபோல போர் பாதித்த பகுதிகளில் தமிழர்களை மறு குடியேற்றம் செய்வதிலும் இலங்கை அரசு எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக