ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

Infosys நாராயண மூர்த்தி:சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது?

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி
பெங்களூரு: சர்வதேச வர்த்தகத்தில் எந்த விஷயத்துக்காகவும் சீனா 'பேசுவதில்லை', செயலில் தனது பலத்தையும் அவசியத்தையும் உணர்த்துகிறது. சீனாவிடமிருந்து இதுபோன்ற விஷயங்களை ஏன் நாம் கற்கக் கூடாது?, என்கிறார் இன்போஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தி.

சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "சமீபத்தில் எச்1பி மற்றும் எல் 1 விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது. இதனால் பலருக்கு தூக்கம் போய்விட்டதாகக் கூறப்பட்டது. எனக்கு அப்படி ஒன்றும் நேரவில்லை. அமெரிக்காவின் மாநில அல்லது மத்திய அரசுடன் நேரடியான வர்த்தக தொடர்புகள் நமக்கில்லை. அதனால்தான் விசா கட்டண உயர்வின் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை.

ஆனால் மனதுக்குள் ஒரு சின்ன அச்சம் எனக்கிருந்தது. இன்றைக்கு விசா விஷயத்தில் கட்டுப்பாடு கொண்டு வந்தவர்கள், மற்ற விஷயங்களிலும் அதை அமல்படுத்துவார்களோ என்று.

சமீபத்தில் அமெரிக்காவின் இந்த தற்காப்புத் தன்மை குறித்து இன்போஸிஸ் வளாகத்தில் பேசினார் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா. இந்த நிகழ்வை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தியாவின் கேபினட் அமைச்சர் ஒருவர், எங்கள் வளாகத்தில் அதுவும் அமெரிக்க தற்காப்புத்துவம் குறித்துப்பேசியது வியப்பாக உள்ளது. சர்வதேச அளவில் எத்தகைய மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நடவடிக்கைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 4 முதல் 5 சதவிகிதம் வரை மட்டுமே வேலையின்மை நிலவிய ஒரு நாட்டில் திடீரென்று 9 முதல் 10 சதவிகித வேலையின்மை நிலவினால் எப்படியிருக்கும்? அதனால்தான் இந்த நிலை என்பதைப் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் இந்த நிலையைச் சமாளிக்க நாம் சும்மா பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

சீனாவைப் பாருங்கள். அவர்கள் எதற்காகவும் பேசிக் கொண்டிருப்பதில்லை. தங்கள் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் செயல்படுகிறார்கள். 32 ஆண்டுகளில், உலகம் தன்னைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அதை ஏன் நாம் கற்றுக் கொள்ளவில்லை?

இந்தியாவின் தொழில்துறை, கல்வித்துறை, அரசு ஆகிய அனைத்தும் சரியான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால், உலகப் பொருளாதாரம் இந்தியாவையும் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தலாம். அன்றைக்கு நாம் எதைப் பற்றியுமே பேச வேண்டிய அவசியமிருக்காது..." என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக