![]() |
ராதா மனோகர் : தமிழ்நாட்டின் அச்சாணி திராவிட முன்னேற்ற கழகம்தான்! ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி திராவிட முன்னேற்ற கழகம்தான்
இந்த பாரம்பரியம் இன்று நேற்று வந்ததல்ல.
அந்நியராலும் மதவாதிகளாலும் ஜாதிவாதிகளாலும் வீழ்த்தப்பட்டு தரையோடு தரையாக கிடந்த திராவிட மக்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி திருப்பள்ளி எழுச்சி பாடிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
இந்த சுயமரியாதை இயக்கத்தின் அடுத்தடுத்த படைகளாக திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும் வரிசை கட்டி வந்தன.
திராவிடப்படை கட்டி வந்த ஒப்பற்ற தளகர்த்தர்களின் வரிசையில் பேரறிஞர் அண்ணாவின் தம்பி என வந்த முத்துவேலர் மகன் கலைஞருக்கு இன்று (ஜூன் 3)பிறந்த நாள் 103 ஆவது பிறந்த நாள்!
கலைஞர் நடந்து வந்த பாதையில் அவரின் கால்களில் குத்திய முட்கள் ஏராளம்.
கலைஞரின் ஒவ்வொரு திட்டத்தையும் உற்று கவனித்தால் கலைஞர் கடந்து வந்த பாதையில் அவரின் பாதங்களை பதம் பார்த்த பல முட்களை அதில் காணலாம்
அந்த வலிகளை அனுபவித்துதான் அவற்றை போக்கும் வழிகளையும் கண்டு பிடித்திருக்கிறார்
முட்கள் நிறைந்த பாதையில் நடந்து இரத்தம் தோய்ந்த கால்கள்தான்,
சரியான பாதையில் செல்ல மக்களுக்கு வழி காட்டி உள்ளது
எந்த பாதையும் கலைஞருக்கு ரோஜாக்களின் பாதைகளாக இருந்ததில்லை.
அத்தனையும் குருதியை பீறிடச்செய்த குரூர பாதைகளாகவே இருந்தன
அவை தந்த வலியில் அந்த வலிகளை மாற்றும் வழிகளையும் கண்டறிந்தார்
அந்த பாதைகளில் பயணிக்கும் மக்களுக்கு அந்த வலிகள் இருக்க கூடாதே என்று தேடி தேடி சென்று திருத்தங்கள் செய்தார்.
வரை படங்களில் கூட இடம் பெற தவறிய சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட அரசு மினி பேருந்துகளை அனுப்பி வைத்தார்
மக்கள் முடங்கி விட கூடாதே என்று சிந்தித்த தலைவர் அவர்.
கண்புரை வளர்ந்து இருளே வாழ்க்கை என்றாகி விட்டவர்களை தேடி தேடி சென்று கண்ணொளியை தந்தார் .
அன்று உலகில் எங்குமே நடந்திராத அதிசயம் இது.
கலைஞர் அறிமுக படுத்திய நலத்திட்டங்கள் வரிசை படுத்த முயன்றால் அது ஒரு பெரிய நூலாகிவிடும்.
கலைஞரின் கண்பட்டு கைபட்டு கால்பட்டு கோடிக்கணக்கான செடிகள் கிராமங்கள் தோறும் எழுந்து நின்று பூக்க தொடங்கின.
அந்த மலர்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்று பூத்து கொண்டிருக்கின்றன.
எதிரிகளின் கண்களை அவை உறுத்தி கொண்டிருக்கின்றன.
இன்று தமிழ்நாடு எதிரிகளுக்கு சவால் விட்டு எழுந்து நிற்கிறது
இதற்கு அடித்தளம் இட்டதில் பேரறிஞர் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் கம்பீர கலைஞர் வீற்றிருக்கிறார்.
கலைஞரின் வாழ்வில் நடந்த சில விடயங்களை பற்றி நான் எழுதிய சில கட்டுரைகளை திரு கௌரா ராஜசேகரன் அவர்கள் கலைஞர் எங்கள் கட்டுமரம்தான் என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார்
அந்நூல் சுமார் ஆறாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக கூறினார்
இது எனக்கு நெஞ்சை நெகிழவைக்கும் பெருமை
கலைஞரின் வாழ்வியலில் எங்கோ ஒரு சிறு மூலையில் என்பெயரும் இடம்பெற்று இருப்பது திராவிடம் எனக்கு தந்த கௌரவ சொத்து.
வாழ்க கலைஞர் வாழ்க திராவிட முன்னேற்ற கழகம்
திராவிடம் என்னும் என்ற போதினிலே
சிறகு விரிகிறது தோள்களிலே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக