![நெல்லை கண்ணன் வீட்டில் போலீஸ்](https://images.assettype.com/vikatan%2F2019-12%2F229b5361-f407-47d7-92bc-e8ae59565e0a%2Fkannan_.jpg?w=640&auto=format%2Ccompress)
![நெல்லை கண்ணன்](https://images.assettype.com/vikatan%2F2019-12%2Ffdb433f8-b6af-4ac9-97e1-a3b5df3a8c17%2Fnellai_.jpg?rect=0%2C0%2C500%2C281&w=480&auto=format%2Ccompress)
vikatan.com - எம்.குமரேசன் - பி.ஆண்டனிராஜ் - எல்.ராஜேந்திரன் : ஏற்கெனவே, நெல்லை கண்ணணுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. `தன் பேச்சு காரணமாக தன்னை கைது செய்து விடுவார்களோ’ என்ற பயத்தால் அவருக்கு இன்று பல்ஸ் வெகுவாகக் குறைந்தது.
நெல்லை, மேலப்பாளையத்தில் ஜவ்ஹீத் ஜமாத் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் மோடி குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், நெல்லை கண்ணனுக்கு பா.ஜ.க, அ.தி.மு.க தரப்புகளில் இருந்து கண்டனம் வலுத்தது. போலீஸில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அ.தி.மு.க தரப்பிலும் இன்று போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நெல்லை கண்ணன் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியானது. இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சியினர் இன்று அவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, நெல்லை கண்ணணுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. `தன் பேச்சு காரணமாக தன்னை கைது செய்து விடுவார்களோ’ என்ற பயத்தால் அவருக்கு இன்று பல்ஸ் வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, நெல்லை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டு சென்றனர். `நெல்லை கண்ணனை அனுமதித்தால் பிரச்னையாகும்’ எனக் கருதி மருத்துவமனை நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்தது.
தொடர்ந்து, தெற்கு பைபாஸ் சாலையில், உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். இந்த மருத்துவமனையில் அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பல்ஸ் வெகுவாக குறைந்திருந்தது. இந்த சமயத்தில், மருத்துவமனை வளாகத்தில் புகுந்த பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் நெல்லை கண்ணனை வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியதையடுத்து அங்கிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியினர் தரப்பில் கூறுகையில், “உடல்நிலை சரியில்லையென்றால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதுதானே. கைது நடவடிக்கைக்குப் பயந்து அவர் நாடகமாடுகிறார்” எனக் குற்றம் சாட்டினர்.
நெல்லை கண்ணனை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மதுரை சாலையில் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதனால், வேறு ஏதாவது ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக