ஞாயிறு, 21 அக்டோபர், 2018

திமுகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல்! மக்களவை தேர்தல் ... தூத்துக்குடியில் கனிமொழி?

மத்திய சென்னையில் தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்பதூரில் டி.ஆர்.பாலு, அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், தஞ்சையில் பழனிமாணிக்கம், தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் நீலகிரியில் ஆ.ராசா
மக்களவைத் தேர்தல்: திமுகவின் உத்தேசப்பட்டியல்!மத்திய பாஜக ஆட்சியின் காலம் அடுத்தாண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. 2019இல் நடைபெறவுள்ளன மக்களவைத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் வந்தால் திமுகவே வெல்லும் என்று பரவலாகப் பேசப்படும் நிலையில், மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என திமுக தலைமை விரும்புகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வியும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
எனவே, மக்களவைத் தேர்தலுக்கு அக்கட்சி வேகமாகத் தயாராகி வருகிறது. கடந்த 17ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பது போன்றவை குறித்து ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. மூன்றே நாட்களில் நேற்று (அக்டோபர் 20) தமிழகம், புதுச்சேரி உட்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
ஒவ்வொரு தொகுதிகளுக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 பேர்கள் அடங்கியுள்ள இந்தப் பட்டியலில் பூங்கோதை ஆலடி அருணா, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் குறித்த முதற்கட்ட ஆலோசனையும் அறிவாலயத்தில் நடைபெற்றுள்ளது. அதன்படி, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்பதூரில் டி.ஆர்.பாலு, அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், தஞ்சையில் பழனிமாணிக்கம், தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் நீலகிரியில் ஆ.ராசா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதில் கனிமொழி தவிர மற்றவர்கள் அனைவரும் அந்தந்த மக்களவை தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டவர்கள். இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவரும் கனிமொழி வரும் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீ வெங்கடேசபுரம் கிராமத்தை கனிமொழி தத்தெடுத்துள்ளது, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியது போன்றவை இதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக