![ko](https://image.nakkheeran.in/s3fs-public/inline-images/kovai%20senthil.jpg)
400க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கும் குமாரசாமி என்கிற கோவை செந்திலுக்கு பள்ளிப்பாளையம் சொந்த ஊர். உடல்நல குறைவால் இன்று காலை கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கோவை செந்தில் மரணத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘’கோவை செந்திலின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிராத்திக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் கோவை செந்தில். இயக்குநர் பாக்கியராஜும் கோவை செந்திலும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு சிறுவேடங்களேனும் கொடுத்து உதவி வந்தார் பாக்யராஜ். அவர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிரரோ, என் ரத்தத்தின் ரத்தமே, பவுனு பவுனுதான், அவசர போலீஸ் 100 படங்களில் கோவை செந்திலுக்கு வாய்ப்பளித்தார். செந்திலும் கொடுத்த பாத்திரத்தில் நடிப்பில் அசத்தினார்.
செந்திலுக்கு 1966ல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை கிடைத்தது. வேலை பார்த்துக்கொண்டே படங்களில் நடித்துக்கொண்டிருந்த செந்தில், 1987ல் வங்கி வேலையை விட்டுவிட்டு முழு நேர நடிகராகிவிட்டார். 1971ல் இவருக்கு திருமணம் மனைவி லட்சுமி. இவரது மகன் கோவையில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் வேலையில் இருக்கிறார். அவருக்கு திருமணம் இனிதே நடந்துள்ளது. மகளை அமெரிக்காவில் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார்.
சென்னையில் கடைசிவரை இந்த கலைஞர் தி.நகரில் ஒரு சின்னை அறையில் வாழ்ந்துவந்தார். சைக்கிளில்தான் எங்கேயும் செல்வார். அதுதான் தனது ஆரோக்கியத்திற்கு காரணம் என்று எல்லோரிடம் சொல்லி சிரிப்பார் கோவை செந்தில். வயது மூப்பின் காரணமாக உடல்நலம் நலிவுற்று அந்த சிரிப்பை நிறுத்திக்கொண்டார்.
கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் கோவை செந்திலை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக