ஞாயிறு, 13 மே, 2018

காங்கிரஸ் : கர்நாடகத்தில் போதிய பெரும்பான்மை கிடைக்காவிடில் மதசார்பற்ற ஜனதாவுடன் கூட்டணிக்கு தயார் ..

மஜதவுடன் கூட்டணிக்கு தயார்: காங்கிரஸ்!மின்னம்பலம்: கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைக்க எந்த தயக்கமும் இல்லை என்று காங்கிரஸ் மாநிலங்களவை துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 தொகுதிகள் தவிர மற்ற 222 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி சென்னபட்னா, ராம்நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நேற்று மாநிலம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி அமைக்கும். சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி இவர்களில் யார் அடுத்த முதல்வராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கும் சட்டப் பேரவையே அமையும் என்று தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இது குறித்து, நேற்று (மே 12) கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலங்களவை துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, “பாஜக வேட்பாளர்களுக்கு செலவுக்காக கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களின் போக்குவரத்துக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் பாஜகவின் தேர்தல் செலவு ரூ.15 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த தேர்தலில் மத்திய அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ஆனந்த் சர்மா, “இதையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெறும். ஒரு வேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மஜதவுடன் கூட்டணி வைக்கவும் காங்கிரஸ் தயங்காது. மதச்சார்பற்ற மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது என காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (மே 13) தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி கட்சியினர் கவலைப்ட வேண்டாம், வார இறுதியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக