ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

தமிழகத்தை சூழும் பன்முக அபாயங்கள்

சிறப்புக் கட்டுரை: பன்முக அபாயங்களின் பிடியில் தமிழகம்மின்னம்பலம்  :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் : ஸ்டெர்லைட் ஆலை குறித்த கட்டுரையின் இறுதிப் பகுதி
ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும்போதே தாங்கமுடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் தூத்துக்குடி மக்கள். இப்போது 8 லட்சம் டன் என்றால் மக்களின் பாடு திண்டாட்டம்தான். இப்போதே 20 எம்.ஜி திட்டத்தின்கீழ் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து குடிதண்ணீரை உறிஞ்சிக் கொண்டுள்ளார்கள். விரிவாக்கப் பணி முடியும்பட்சத்தில் தாமிரபரணி தண்ணீர் ஸ்டெர்லைட் ஆலைக்கே போதாது என்ற நிலை வரும். அப்போது கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
ஸ்டெர்லைட் என்ற தாமிரத் தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மட்டுமல்லாது மக்களுக்குப் பல நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாகப் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், சிறுநீரகம் பாதிப்பு எனச் சகலவிதமான நோய்கள் இந்த செம்புத் தொழிற்சாலையின் நச்சுப் புகையினால் ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் நிச்சயம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள். ஏனெனில் அதற்குக் காரணம் ஸ்டெர்லைட் ஆலை. சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், ஒவ்வாமை க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ், சுவாசநோய், தோல்நோய், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றன.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.
வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றி எந்தக் கவலையும் கொள்வதில்லை. நீரி போன்ற அமைப்புகள்தான் காற்று மாசுபடுதல் அளவீடுகளை நிர்ணயம் செய்துள்ளது. அதைக் குறித்து அறிய கருவிகளும் அமைக்கப்படுகிறது. வெறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்து விட்டாலே எந்தத் தொழிற்சாலையும் ஆபத்தில்லை என நினைப்பது தவறான நோக்கமாகும். சில இடங்களில் காற்று மாசு அளவிடும் கருவிகள் கூடச் சரிவர இயங்குவதில்லை. அதன் அளவீடுகளையும் நமது விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.
ஸ்டெர்லைட் ஆலையில் புதியதாக இரண்டாம் அலகு நிறுவுவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகத் தேவையான கருவிகளை 500 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. ஏற்கெனவே முதல் அலகுக்கு அத்தகைய வசதிகளைச் செய்யவில்லை. ஏற்கெனவே ஓடும் ஆலையினால் காற்று மாசுபடுகிறது. புதிதாக நிறுவும் இரண்டாவது பிரிவுக்கு மட்டும் 500 கோடி ரூபாய் செலவிடுதல் போதுமா? இரும்பு அல்லாத (Non-ferrous) உலோகங்களான அலுமினியம், செம்பு, ஈயம், துத்தநாகம், எவர்சில்வர், வெள்ளி போன்ற வேதிப் பொருள்கள் உற்பத்தியில் ஆபத்துகள் நிரம்பியுள்ளது. இதன் கருவிகளை மறுசுழற்சியும் செய்ய முடியாது. இப்படியான நிலைதான் ஸ்டெர்லைட்டில் உள்ளது. நோயை விலை கொடுத்து வாங்குகின்ற கதை தான்.

போபாலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷ வாயு விபத்தைப் பற்றி இன்றும் அச்சத்தோடு பேசுகிறோம். விபத்து நடந்த பின்னர் ஒப்பாரி வைத்து, கூப்பாடு போடுவதால் என்ன பயன்? போபால் வழக்குக்குப் பின்னர்தான் நச்சுக் கலக்கும் தொழிற்சாலைகள் பற்றிய சிந்தனையையும், விழிப்புணர்வையும், தரத்தைச் சோதிக்கும் ஐ.எஸ்.ஓ முறையும் நடைமுறைக்கு வந்தது. தூத்துக்குடியில் பல தொழிற்சாலைகள் இந்த ஐ.எஸ்.ஓ முறைக்குக் கட்டுப்படாமல் நடப்பதாகச் செய்திகள் உண்டு. இந்தத் தொழிற்சாலைகள் புகை ஒருபக்கம், நச்சுப் புகை ஒருபக்கம், விஷக் கழிவுகள் அதிகப்படியாகச் சேருகின்றன.
சூழும் அபாயங்கள்
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், செடிகள், மரங்களின் இலைகளும், பூக்களும் நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.
அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விபத்துக்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கறுப்புக் கழிவுகள், வெள்ளை நிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக்கொண்டு சாலைகள் அமைத்துவருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர்.
மக்களைப் பீடிக்கும் நோய்கள்
1994 முதல், 2004க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்றுள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.
தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது.
தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்துவருகிறது. சுவாசக் கோளாறு, புற்றுநோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்துவருகிறது.
தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்றுச்சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள், மீத்தேன் எடுக்கும் ஆலைகள், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் துத்தநாகம், பிளாட்டினம் போன்றவற்றை உருக்கி எடுக்கும்போது வரும் நச்சுப் புகையால் ஏற்படும் பாதிப்புகள், நரிமணம் பெட்ரோல் ஆலை போன்ற பாதுகாப்பற்ற ஆலைகள் தமிழகத்தை என்றைக்கும் அபாயகரமான பகுதிகளாக்கும்.
இந்த ஆபத்துகளிலிருந்து தமிழகம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுமா என்பதுதான் கேள்வி.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இருபத்தைந்து ஆண்டுகளாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து களப்பணியாற்றியிருக்கிறார். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக