ஞாயிறு, 21 ஜனவரி, 2018

ஆ.ராசா ... வரலாறு காட்டிய திராவிட மாவீரன்

சிவசங்கர் எஸ்.எஸ் : தாய், தந்தையருக்கு அவர் எட்டாவது பிள்ளை. எட்டாவது பிள்ளையென்றால் கசப்பாகத் தான் பெயர் வைப்பார்கள். ஆனால், இவரது பெற்றோர் இவருக்கு வித்தியாசமாக இனிப்பாக, மகிழ்வாகப் பெயர் வைத்தார்கள். ஆம், 'ராசா' என்று வைத்தார்கள். ஆமாம், அவர் தான் ஆ.ராசா.
இவர் வாழ்வே வித்தியாசம் தான். இவர் பிறக்கும் வரை, இவர் பெற்றோர்கள் இலங்கையில் இருந்தார்கள். இவர் இந்தியாவில் பிறந்தவர். இவரது குடும்பம், ஆன்மீகத்தில் ஊறியக் குடும்பம். இவர் மாத்திரம், பாடாலூர் பள்ளியில் படித்தக் காரணத்தால், பெரியார் வழியில் பயணித்தார்.
குடும்பத்தார் விருப்பப்படி பி.எஸ்.ஸி முடித்தவர், தன் விருப்பப்படி, குடும்பத்தினர் விருப்பத்திற்கு மாறாக, மதுரை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.
முசிறியில் பி.எஸ்.சி படிக்கும் போதே, திராவிடர் கழக மாணவரணியில் பணியாற்றினார். இவர் பணி காரணமாக மாநில துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

சட்டக் கல்விக்கு பின், பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி துவங்கினார். மூத்த வழக்கறிஞர் வள்ளுவன்நம்பி அவர்களிடம் இளையராகப் பணியாற்றினார். மெல்ல, மெல்ல தன் முத்திரையைப் பதித்து, தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
வழக்கறிஞராக மாத்திரம் அல்லாமல், சமூகப் பணியிலும் தன் அடையாளத்தை இவர் தொடர்ந்து பதித்து வந்தார். அம்பேத்கர் மன்றத்தின் மூலம், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை இளையோரிடம் கொண்டு சேர்த்தார். கழகத்தின் இலக்கிய அணியில் பணியாற்றினார். 1996ல் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில், கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1998 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி தழுவினாலும், அயராது கழகப் பணியாற்றினார். 1999 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். நாடாளுமன்ற இணை அமைச்சராக, தலைவர் கலைஞரால் நியமிக்கப்பட்டார்.
தன் பணியால், தலைவர் கலைஞர் மனம் கவர்ந்து, கேபினெட் அமைச்சரானார். அதுவும் பிறகு, பிரச்சினைக்குரிய துறையான தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராகவும் ஆனார்.
வெறும் அமைச்சராக காலம் போக்க விரும்பாமல், துறை குறித்து துருவி ஆராய்ந்தார். பதுக்கி வைக்கப்பட்டிருந்த அலைக்கற்றை வரிசையை பொதுவெளிக்கு கொண்டு வந்தார். புதிய தொழில் முனைவோர் பங்கேற்கும் வகையில், நடைமுறையை எளிதாக்கினார்.
அதைக் குற்றம் என்றனர். குறிப்பாக, சி.ஏ.ஜி குற்றம் சாட்டியது. நாட்டுக்கு 1,76,000 கோடி நட்டம் என்றனர். ஆனால், நாள் ஒன்று முதல் அதை மறுத்து வாதாடினார் அண்ணன் ஆ.ராசா.
அது தவறே அல்ல, அது ஒரு தொலைத் தொடர்புப் புரட்சி என்றார் அண்ணன் ராசா. அது தான் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை எனவும் முழங்கினார். இதன் காரணமாகத் தான், அலைவரிசைப் பயன்பாட்டிற்கான கட்டணம் குறைந்தது.
ஆனால், நாட்டிற்கு நட்டம் என்று எதிர்கட்சிகள் தாண்டவமாடின. நட்டம் இல்லை என்பது என் கருத்து. அதில் அண்ணன் ராசாவும் உறுதியாக இருந்தார். வழக்கு குறித்து அறிந்தவர்களுக்கு, அது அரசியல் என்பது தெரியும்.
இப்போது நிரூபித்து விட்டார், தான் நிரபராதியென்று, வழக்கில் வென்று.
ஒரு மத்திய அமைச்சர் மீது குற்றம் சுமத்தி, அவர் கருத்துக்கு காது கொடுக்காமல், பதவி விலக வைக்கப் பட்டது இவராகத் தான் இருக்கும்.
ஒரு குற்றத்தின் ஆழம் தெரியாமல், உச்சநீதிமன்றம் கமெண்ட் அடித்து, தங்கள் பார்வையின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என அறிவித்தது இது தான் முதல்முறையாக இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர் வாய்தா வாங்காமல், வழக்கு விசாரணையில் ஆஜரானது இவராகத் தான் இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவரே, வழக்கறிஞராக தனக்காக வாதாடி, வழக்கின் முக்கிய ஆதாரங்களை தகர்த்தது இவராகத் தான் இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதி, குற்றவாளிக் கூண்டில் ஏறி, வழக்கில் சாட்சி சொன்னதும் இவராகத் தான் இருக்கும்.
மாநிலக் கட்சியின் பிரதிநிதியாக, ஆதிக்க சக்திகளின் சதிகளை முறியடித்து, வழக்கில் வெற்றி கண்டதும் இவராகத் தான் இருக்கும்.
வழக்கில் வென்றதோடு நிறுத்தாமல், தன் வாதங்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் துணிச்சல் மிகுந்தவரும் இவராகத் தான் இருக்கும்.
ஆம், உலகே ஆர்வத்தோடு எதிர் நோக்கிய 2ஜி வழக்கில் தன் சட்ட அறிவால், நேர்மைத் திறத்தால் வென்றதோடு மாத்திரமல்லாமல் வழக்கின் விபரங்களை நூலாகத் தொகுத்து, அனைவரின் பார்வைக்கும் வைக்கும் திறன் படைத்தவராகத் திகழ்வது அண்ணன் ஆ.ராசாவாகத் தான் இருக்கும்.
"2G saga unfolds" நூல், நாளை மாலை டெல்லியில் வெளியாகிறது.
# நேர்மைத் திறத்தோடும், நெஞ்சுரத்தோடும் நிற்கிறார் எம் அண்ணன் ஆ.ராசா !
_எஸ்.எஸ்.சிவசங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக