ஞாயிறு, 26 நவம்பர், 2017

ஆர் கே நகர் தேர்தல் ...மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் திமுக அழைப்பை எதிர்பார்த்து?

திமுகவுக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட், மதிமுக நிலைப்பாடு?மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களுடைய நிலைப்பாடு குறித்து, வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. திமுக வேட்பாளராக மீண்டும் மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காங்கிரஸ், விசிக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவை தங்களது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நேற்று (நவம்பர் 25) சிவகங்கையில் நடைபெற்ற கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்ன காரணத்துக்காக நிறுத்தப்பட்டது என்பதை தேர்தல் ஆணையம் நினைவில்கொள்ள வேண்டும். எனவே இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். இடைத்தேர்தலில் கட்சியின் நிலை குறித்து நவம்பர் 30இல் கோவையில் நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்ற அவர், “தமிழக அரசு புதிதாக 70 மணல் குவாரிகளைத் திறப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக செயற்கை மணலை உருவாக்க வேண்டும் அல்லது மணல் இறக்குமதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் டிசம்பர் 3ஆம் தேதி உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யப்படும், 1980ஆம் ஆண்டுக்குப் பிறகான இடைத்தேர்தல்களில் பணமே முக்கிய பங்கு வகித்துள்ளது” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், திமுகவை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக திமுக நடத்திய போராட்டங்கள், நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்றுள்ளது. அதேபோல திமுக எதிர்ப்பு மனநிலையில் இருந்த வைகோவும், தற்போது நட்புறவில் இருந்து வருகிறார். ஏற்கெனவே திருமாவளவன், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்க உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக