திங்கள், 6 நவம்பர், 2017

மோடி எதற்காக கோபாலபுரம் போனார்?

டிஜிட்டல் திண்ணை: மோடி எதற்காக கோபாலபுரம் போனார்?
மின்னம்பலம் : பவளவிழாவில் கலந்துகொள்ள மோடியின் வருகை உறுதிசெய்யப்பட்டபோது, கோபாலபுரம் செல்வது அவரது பயணத் திட்டத்தில் இல்லை. நேற்று முன்தினம் இரவுதான், சென்னைக்குச் செல்லும்போது கருணாநிதி வீட்டுக்கு மோடி செல்வது உறுதியானது. ஆனால், அதை அதிகாரபூர்வமாக டெல்லி அறிவிக்கவில்லை. ஷார்ஜாவில் இருந்த ஸ்டாலினுக்கு நேற்று காலை பிரதமர் சென்னை விசிட் பற்றியும் கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் வர அவர் விருப்பம் தெரிவித்திருப்பது குறித்தும் சொன்னார்கள். ஸ்டாலினும் உடனே சம்மதம் சொன்னார். வரும் 9ஆம் தேதிதான் ஸ்டாலின் ஷார்ஜாவிலிருந்து தமிழகம் திரும்பத் திட்டமிட்டிருந்தார். பிரதமர் வருகை காரணமாகத் தன் பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு 2 மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தார். கருணாநிதியைப் பார்த்துக்கொள்பவர்களுக்கு மட்டும் நேற்று ஸ்டாலின் தகவல் சொல்லி இருக்கிறார். ‘அப்பாவை சீக்கிரமே தூங்க வெச்சுடுங்க... காலையில் சீக்கிரமா அவரை எழுப்பி கிளம்ப வைக்கணும்...’ என்று தொடங்கி சில இன்ஸ்ட்ரக்‌ஷன்களை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். அதன்படியே கோபாலபுரம் தயாராகியிருக்கிறது.


வழக்கமாகத் தாமதமாக எழுந்திருக்கும் கருணாநிதியை இன்று காலையில் சீக்கிரமே எழுப்பித் தயார் செய்திருக்கிறார்கள். ஸ்டாலின், செல்வி, கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சீக்கிரமே கோபாலபுரம் வந்துவிட்டார்கள். கோபாலபுரத்துக்கு மோடி வரப் போகிறார் என்பது இன்று காலையில் அதிகாரபூர்வமாக உறுதியானதும் திமுகவில் இரு வேறு கருத்துக்கள் பேசப்பட்டன. ‘தலைவர் வீட்டுக்கு மோடி இப்போ எதுக்கு வராரு.... இதுல எதாவது அரசியல் இருக்கும். அவரை வர வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்...’ என சில மாவட்டச் செயலாளர்கள் பேசியிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, ‘மோடி வருவது நல்ல விஷயம்தான். எதிர்காலத்தில் ஒருவேளை கூட்டணி என்று வந்தால், மத்தியில் இணக்கமாக இருப்பது நல்லதுதானே’ என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
ஸ்டாலினோ, ‘நாம போய் யாரையும் வாங்க என்று கூப்பிடவில்லை. அவங்களே வராங்க. வரட்டும். வரவுங்களை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம்...’ என்று சொல்லியிருக்கிறார். மோடி வந்தார். கருணாநிதியைப் பார்த்தார். ஸ்டாலின் கை பிடித்துச் சிரித்தார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ‘ மோடி காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாரு. கருணாநிதியைப் பார்க்க அவரு வீடு தேடி வராருன்னா எதாவது அரசியல் ஆதாயம் இல்லாமல் வர மாட்டாரு. இதுல நிச்சயம் எதாவது அரசியல் காய்நகர்த்தல் இருக்கும். ஏற்கெனவே ஜெயலலிதா மறைந்த போது வந்த மோடி, சசிகலா தலையில் கைவைத்து ஆறுதல் சொன்னார். பிறகு சசிகலா வேண்டாம் என முடிவெடுத்தபோது, அவரது குடும்பத்தைக் கட்சியிலிருந்தே விரட்டக் காரணமாக இருந்தார். இப்போது, தமிழ்நாட்டில் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்துகொண்டிருக்கிறது. அதனால், அதிமுகவை அப்படியே விட்டுவிட்டு திமுக பக்கம் பிஜேபி வரப் பார்க்கிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. அதற்கு ஆரம்பமாகத்தான் கருணாநிதியைப் பார்க்க வந்திருக்கிறார்..’ என்றும் திமுகவில் சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், “எப்படி இருந்தாலும் 2 ஜி வழக்கின் தீர்ப்பு விரைவில் வந்துவிடும். தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி கருணாநிதி வீட்டுக்கு மோடி வந்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது!” என்று கமெண்ட் போட்டது.

பதிலை அடுத்த ஸ்டேட்டஸாகப் பதிவிட்டது ஃபேஸ்புக். “2 ஜி வழக்கின் தீர்ப்பு இன்னும் தள்ளிப்போகும் என்றுதான் சொல்கிறார்கள். எப்படியும் டிசம்பர் 9ஆம் தேதி, அதாவது குஜராத் தேர்தலுக்கு முன்பாக வழக்கின் தீர்ப்பு வர வேண்டாம் என பிஜேபி நினைக்கிறது. காரணம், 2 ஜி வழக்கிலிருந்து எல்லோரும் விடுதலை ஆவார்கள். தீர்ப்பு திமுகவுக்குச் சாதாகமாகவே வரும் எனத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. தீர்ப்பு முன்கூட்டியே வந்தால், அது குஜராத் தேர்தல் முடிவை பாதிக்கும் என பிஜேபி கணக்கு போடுகிறது. தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வரும் என்பது உறுதியானதால்தான் மோடி, கோபாலபுரத்துக்கே வந்தார் என்று சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் மோடி மீது திமுகவினர் மத்தியில் மரியாதை கூடியிருப்பதைப் பார்க்க முடிகிறது” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கும் லைக் போட்டுவிட்டு மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

“கோபாலபுரம் வீட்டுக்கு மோடி செல்லப்போகும் தகவல் இன்று காலையில்தான் அதிகாரபூர்வமாகத் தமிழக அரசுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. ‘இவரு எதுக்கு அங்கே போறாரு?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டிருக்கிறார் முதல்வர். ஆனால், யாருக்கும் பதில் தெரியவில்லை. தினத்தந்தி விழா முடிந்து, திருமண விழா, கருணாநிதி சந்திப்பு என எல்லாம் முடிந்து மோடி டெல்லிக்குப் போன பிறகு பன்னீருடன் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘அவரு கருணாநிதியை மனிதாபிமானத்துடன் போய் பார்த்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அப்படி மோடி போயிருப்பாரான்னு தெரியலை. நாம ரொம்பவே உஷாராக இருக்கணும்... இதுல ஏதோ சூட்சமம் இருக்கிற மாதிரியே இருக்கு..’ என்று சொன்னாராம். பழனிசாமியும், பன்னீரும் இது தொடர்பாகத் தொடர்ந்து ஆலோசித்துவருகிறார்களாம். பயம் இருக்கத்தானே செய்யும்! இன்னொரு பக்கம் காங்கிரஸும் மோடியின் கோபாலபுரம் விசிட்டில் உள்நோக்கம் இருக்குமா எனத் தீவிர டிஸ்கஷனில் இருக்கிறதாம்” என்ற கமெண்ட்டுடன் மெசேஜ் முடிந்தது. வாட்ஸ் அப் ஆஃப்லைனில் போயிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக