ஞாயிறு, 26 நவம்பர், 2017

ஆர் கே நகரில் திருமாவளவன் திமுகவுக்கு ஆதரவு ...

மின்னம்பலம் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து திமுக இன்று (நவ.25 ) ஆலோசனை நடத்தியது. இதில், கடந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருதுகணேஷை மீண்டும் வேட்பாளராகத் தேர்வு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நேற்றே அறிவித்த நிலையில், மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தார்.

“திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தங்களின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று தொலைபேசி வாயிலாகவும் எழுத்துபூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்ததையடுத்து திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதேபோல், திமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் அறிவித்துள்ளார்.
திமுகவை ஆதரிப்பதாக காங்கிரஸும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுப்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, மேலும் சில கட்சிகளும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக