ஞாயிறு, 26 நவம்பர், 2017

2 லட்சம் மக்களை சென்னையை விட்டு துரத்தி இருக்கிறது அரசாங்கம்.

Vijay Bhaskarvijay : கிட்டத்தட்ட 2 லட்சம் மக்களை வலுக்கட்டாயமாக சென்னையை விட்டு வெளியே துரத்தி இருக்கிறது அரசாங்கம். பிரபல ஊடகங்கள் அனைத்தும் இதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை.
ஒருவன் இருக்கிறான். மிக மிக அநியாயமாக கொள்ளையடிக்கிறான்.
அவன் கொள்ளையடித்த பணத்தில் தன் மனைவி மக்கள் சொந்தபந்தம் அனைத்துக்கும் நல்லது செய்கிறான். இரண்டு மூன்று தலைமுறைக்கு சேர்த்து சொத்து சேர்த்து விட்டான்.
அடுத்து அவன் வாரிசுகள் ”அறமாக” வாழமுடியும்.
மிக நல்லவர்களாக நாசூக்காக வாழ முடியும்.
ஆக அறமான வாழ்க்கையை வாழ அவர்கள் முன்னோர்களில் ஒருவன் அறமில்லாத வாழ்க்கையை வாழ வேண்டியதிருக்கிறது. நாம் ஏன் அந்த முன்னோராக இருந்து முயற்சி செய்யக் கூடாது என்றொரு ஏழை நினைக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது.

எவனக் கொன்னாவது, எவன அழிச்சாவது, எவன ஏமாத்தியாவது பணம் சேரு. அதுதான் முக்கியம் என்ற எண்ணம் ஒரு பரம ஏழைக்கு வரவாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது.
இப்படியான சிந்தனைகளை இப்படிப்பட்ட வலுக்கட்டாய வெறித்தனமான துரத்தல்கள் அதிகப்படுத்தும்.
அரசாங்கத்தின் அதிகாரம்
ஊடகங்களின் அலெட்சியம்
பொதுமக்களின் கண்டுகொள்ளாமை
சரியான வேலைவாய்ப்பின்மை
ஒதுக்கபடுகிறோம் என்ற உணர்வு
கல்வி கற்பதற்கான வாய்ப்பின்மை.
பொது சுகாதாரம் மறுக்கபடுவது
இந்த சூழல் ஒருவனுக்கு வாழ்க்கை மேல் நம்பிக்கையை கொடுக்குமா என்ன ?
நிச்சயம் கொடுக்காது.
ஒரு வயதான ஆட்டோ டிரைவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் இப்போது உள்ள இளைஞர்கள், அதாவது படிப்பு வராமல் ஏதாவது வேலை செய்து பிழைக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் ஆட்டோ ஒட்ட வருவதில்லை என்றும் அதற்கு காரணம் ஆட்டோ தொழிலில் 1980 கள் 90 கள் மாதிரி வருமானம் இல்லை என்றும் சொன்னார்.
ஒரு ஏழைக் குடும்ப குழந்தை இருக்கிறது.
- பிறக்கும் போதே ஏழ்மையில் பிறக்கிறது
- சரியான ஊட்டச்சத்து அதற்கு கிடைப்பதில்லை
- சரியான கல்வி கிடைப்பதில்லை
- கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் சுற்றுச் சூழல் கிடைப்பதில்லை.
- ஏற்கனவே கற்காமல் சிறு சிறு வேலை செய்யும் இளைஞர் கூட்டம் அக்குழந்தையை திசை திருப்பும் வாய்ப்பு அதிகம்.
- இதையெல்லாம் தாண்டி படிக்க வந்தால் அவர்களுக்கு படிப்பதற்கு சரியான பணம் இல்லை.
- குடிப்பழக்கம் சிகரெட் பழக்கம் போதைப் பழக்கம் பழகும் வாய்ப்பு அதிகம்.
- Drop out என்ற பள்ளிக்கல்வியை விடுவதற்கான வாய்ப்புகள்தாம் 90 சதவிகிதம் இருக்கிறது.
- ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்றால், தொழில் செய்து பிழைக்கலாம் என்றால் அதற்கான அடிப்படை பண மூலதனம் கிடைப்பதில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு ஏழையிடம் சென்று நீ உழைத்துக் கொண்டே இரு முன்னேறலாம் என்று சொல்வதே ஒரு வன்முறைதான். அப்படி ஒன்று இங்கே சாத்தியமே கிடையாது.
நாம் விதிவிலக்குகளை கொண்டாடி உதாரணமாக காட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு கூட்டத்தை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டு தீயை நாலு பக்கமும் பற்ற வைத்து விட்டு “உங்களால் முடியும் வெளியே வர முடியும்” என்றால் ஒன்றிரண்டு பேர் வெளியே வரத்தான் செய்வான். ஆனால் 90 பர்சண்ட் ஆள் உள்ளே இருந்து மடிந்து சாம்பல்தான் ஆவார்கள்.
அதுதான் இங்கும் அதிகாரம், சுரண்டல், கல்வி மறுப்பு, வீடு மறுப்பு என்று ஆயிரம் வகையான தீயை ஏழைகளை சுற்றி பற்ற வைத்து விட்டு ” நேர்மையாக உழைத்து நீ முன்னேறலாம்” என்று சொல்வதே அபத்தம்.
ஒரு ஏழை மாணவன் கஷ்டப்பட்டு படிக்கிறான். அவனுக்கு பிளஸ் டூ மார்க்காக 900 மார்க் கிடைக்கிறது. அதற்கு மேல் அவனுக்கு படிக்க வசதியில்லை. அவனுடன் படித்த கொஞ்சம் வசதியான பையன் 890 மார்க் எடுத்திருக்கிறான். அவன் வசதியை வைத்து ஒரு செல்ஃப் ஃபைனான்ஸ் ஃப்ரீ சீட் வாங்கி பி.ஈ படித்து விடுகிறான். முடித்ததும் ஒரு வேலைக்கு சென்று வேறு லெவலுக்கு சென்று விடுகிறான். இந்த ஏழை மாணவனால் அவன் லெவலை தாண்டவே முடியவில்லை. பணம் மிக அவசியமாக இங்கே இருக்கிறது.
எல்லாமே பணம் என்றாகிவிட்டதை இந்த உலகம் ஒருவனுக்கு நிருபிக்கும் போது “எப்படின்னாலும் பணம் சம்பாதிக்கலாம்” என்று தோன்றுவதை எது தடுக்கிறது.
எனக்கு தெரிந்து அவன் குடும்பம் தடுக்கிறது.
ஷேர் ஆட்டோ ஒட்டும் பல இளைஞர்களிடம் கேட்கும் போது 23 வயதிற்குள் திருமணம் செய்திருப்பார்கள். குழந்தை பிறந்திருக்கும். இந்தக் குடும்பம் என்ற உணர்வுதான் அவர்களை “எப்படின்னாலும் பணம் சம்பாதிக்கலாம்” என்ற உணர்வில் இருந்து தடுக்கிறது. அவர்களுடைய குறைந்தபட்ச மகிழ்ச்சி அவர்கள் குடும்பத்தால்தான் கிடைக்கிறது.
ஒரு பணக்காரனுக்கு எப்படி என்று தெரியாது. ஏழ்மையில் வாழ்பவர்களுக்கு வீடு சுகமானது. “சார் போனமா வீட்ல சாப்பிட்டு தூங்குறதுதான் நிம்மதி “ என்பார்கள்.
இதில் அந்த “வீட்ல” என்பது முக்கியமானது. ஒரு வீடு என்பது வீடல்ல என்பதும் அது அமைய வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது செட் ஆக வேண்டும். அப்படி பல வருடங்களாக செட் ஆன வீட்டில் இருந்து வரும் மக்களின் வாழ்க்கையையே குலைப்பதாக துரத்தி விடுகிறார்கள்.
அவ்வளவுதான் இவர்கள் ஊருக்கு வெளியே போய்விட வேண்டும்.
ஏதாவது செய்து மாதம் பத்தாயிரம் ரூபாய் ஒருவர் சம்பாதித்தாலும் அவர் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாது. பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகம் சம்பாதிக்க கடுமையான உடல் உழைப்பைக் கொட்ட வேண்டும். கைக் காலை ஆட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கில் வாங்கும் Technoclark உத்தியோக நிலையை அவனால் நினைத்துப் பார்க்க முடியாது.
ஆக புறநகருக்கு துரத்தப்படும் இந்த ஏழையால் மறுபடி சென்னை அடையார் சாஸ்திரி நகரில் ஒரு வீட்டில் குடி வரவே முடியாது.
பல விஷயங்களில் கட் அண்ட் ரைட்டாக இருக்கும் அரசு வீட்டு வாடகை விஷயத்தில் தாராளமாக இருக்கும்.
எவ்வளவு வாடகை வேண்டுமனாலும் யார் வேண்டுமானாலும் நிர்ணயம் செய்து கொள்ளலாம். மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் இதற்கு பயந்து மூவாயிரம் ரூபாய் வீட்டை வாடகைக்கு எடுத்தால் அது ஒற்றை அறையாக மட்டுமே இருக்கும்.
அதில் ஒரு குழந்தை எப்படி படிக்கும். வாழ்க்கையில் முன்னேறும்.
இப்படி துரத்தப்படும் ஏழை இளைஞர்களுக்கு ஒருவேளை மறுபடியும் சென்னை அடையாறுக்கோ, கோபாலபுரத்துக்கோ போக வேண்டுமானால் பணம்தான் வேண்டும்.
அந்த பணத்தை எப்படியாவது. எப்படியாவது எப்படியாவது சம்பாதிக்க வேண்டும்.
நேர்மையாக என்னைக்கு சம்பாதிக்கிறது. எதாவது வழில சம்பாதிக்கலாம் என்று தோன்ற ஆரம்பித்து விட்டால் மொத்த சமூகமும் சமநிலை இழக்கும்.
அப்படி எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்
எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும்.
அறமாவது ஆட்டுக்குட்டியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையை இது போன்ற வீடு இடிப்பு கொடூர துரத்தல்கள் அதிகப்படுத்தும்.
இதை யாருக்காகவும் எழுத வில்லை.ஒரு புலம்பல்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக