ஞாயிறு, 1 அக்டோபர், 2017

தமிழ் பேசும் நடிகைகளுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகள்! - ஸ்ரீ பிரியங்கா

நேர்காணல்: தமிழ் பேசும் நடிகைகளுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகள்! - ஸ்ரீ பிரியங்காமின்னம்பலம்: வடசென்னை பகுதியை மையமாகக்கொண்டு விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஸ்ரீ பிரியங்கா. இவர் இதற்கு முன்பு அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி சாமி இயக்கிய ‘கங்காரு’ படத்தில் நடித்து, தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். தமிழ் பேசும் நடிகைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள தமிழ்த் திரையுலகில், ஸ்ரீ பிரியங்கா தமிழ் பேசி நடிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் இவர் நடித்த பிச்சுவாகத்தி திரைப்படம் வெளிவந்தது. இனிகோ பிரபாகருக்கு ஜோடியாக நடித்திருந்த இவருடைய நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி இயக்கும் மிக மிக அவசரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் ப்ரீவியூ திரையரங்கில் மின்னம்பலம் நேர்காணல் பகுதிக்காக இவருடன் கலந்துரையாடினோம்.

சினிமாவில் உங்கள் முதல் வாய்ப்பு பற்றி கூறுங்கள்?
நான் சினிமாவுக்கு வருவேன் என்று ஒருநாளும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய அப்பாவின் நண்பர் மூலமாக முதல் பட வாய்ப்பு கிடைத்துவிட்டது. என்னுடைய முதல் படம் அகடம், கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து சில நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.
அதனையடுத்தே சினிமாவை என் கேரியராகத் தேர்வு செய்தேன். என்னைத் தேடி வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டேன். திரையுலகில் தமிழ் பேசும் நடிகைகள் மிகவும் குறைவு. அந்த வகையில் நான் ஒரு தமிழ் பேசும் நடிகையாக முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
சினிமாவில் நடிக்க வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நீங்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க என்ன காரணம்?
இந்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைத்திருப்பதையே நான் பெரிய விஷயமாக நினைக்கிறேன். ஒரு தமிழ் பெண்ணாக இருந்துகொண்டு இத்தனை படங்கள் நடித்தது என்பதே பெரிய விஷயம். நான் நடிக்கும் படங்களில் எனக்கான அம்சங்கள் இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் அந்தப் படங்களை அவாய்ட் பண்ணிவிடுவேன். நான் எப்போதும் எனக்கான கதை இதுதான் என்று முடிவு செய்வதில்லை. இயக்குநர்கள் என்னிடம் கதை கூறும்போது கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதில் உள்ள சவாலைத் தான் பார்ப்பேன். இந்த கேரக்டரை பண்ண முடியுமா என்று என்னைக் கேட்டுக்கொள்வேன். அந்த வகையில் நான் நடித்த படங்கள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். சிலர் எதிர்பார்ப்பது என்னிடமிருந்து கிடைக்கவில்லை எனும்போது நான் என்ன செய்வது? இன்னும் எவ்வளவோ இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிச்சுவாகத்தியில் உங்கள் நடிப்புக்கு எந்த மாதிரியான எதிர்வினைகள் வருகின்றன?
இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. என்னுடைய கதாபாத்திரம், வசனங்களைவிட ரியாக்ஷன் மூலமாக ஒரு விஷயத்தை விளக்குவது போன்று அமைந்திருந்தது. அதற்கான மெனக்கெடல் இருந்தது. இப்போது அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இயக்குநர் ஐயப்பன் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அவரிடம் கேட்கும்போது மிகவும் பொறுமையாக எனக்கு எடுத்துக் கூறிப் புரியவைத்தார். இனிகோ பிரபாகர் உள்ளிட்ட சக நடிகர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். பிச்சுவாகத்தி பார்த்துவிட்டுப் பலரும் என்னை பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழ்த் திரையுலகில் தமிழ் பேசும் நடிகைகளுக்குப் பெரிய அளவுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லையே ஏன்?
இந்த கேள்விக்கான விடை இன்றுவரை தெரியவில்லை. வடஇந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் சுலபமாக வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துத் சென்றுவிடுகிறார்கள். ஆனால் தமிழ் பேசும் எங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினமாகவே உள்ளது. அப்படியே ஏதாவது சில படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும், அந்த படங்கள் வெளியாவதில் சிக்கல் உருவாகிவிடுகிறது. இங்கு ஏதோ ஒருவகையில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது உண்மைதான் அது எதனால் என்பதை ஊடகங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும். தாங்கள் புறக்கணிக்கப்படுவதைத் துணிச்சலாக வெளியில் சொல்பவர்கள் குறைவு. அப்படிச் சொல்பவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக்கொண்டார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கிறேன். முடிந்தவரை நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் (சிரிக்கிறார்).
கிளாமர் குறித்து உங்கள் கருத்து என்ன?
கிளாமர் என்பது ஒருவர் பார்க்கும் பார்வையிலும், உடைகள் தேர்விலும் உள்ளது. ஒருவர் அணியும் ஆடையை மட்டுமே வைத்து கிளாமர் என்று கூறுவது தவறு. எந்த விதமான உடையணிந்தாலும் அதற்கேற்ப நடிப்புத் திறமையை வெளிக்காட்டுவதே கவர்ச்சியாகும். இதுவரையில் கிளாமரான கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடிக்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய இயக்குநர்கள்தான். நான் நடித்த எல்லாப் படங்களிலுமே என்னை ஒரு ஹோம்லியான பெண்ணாகத்தான் நடிக்க வைத்துள்ளனர். இதுவே எனக்கு பெஸ்ட்டாக இருப்பதால் கிளாமராக நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன்.
நீங்கள் பணியாற்றிய இயக்குநர்கள் பற்றி சொல்லுங்கள்?
நான் நடித்த படங்கள் அனைத்திலும் இயக்குநர்கள் ஒரே மாதிரியான இயல்பிலேயே இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. குறிப்பாக நான் நடித்த கங்காரு படத்தை இயக்கிய சாமி சார் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் படத்தில் நடிப்பதற்கு முன்பு, அவரைப் பற்றி வந்த செய்திகளைப் பார்த்து முதலில் பயந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றலாமா, வேண்டாமா என்று ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அவருடைய படத்தில் நடித்தபோது உண்மையாகவே நான் கேள்விப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று உணர்ந்துகொண்டேன். என்னை ஊக்குவிப்பவராக இருந்தார். அவரை பொருத்தவரை 'ஓவர் டேக்' எடுக்காமல் கூறும் விஷயங்களைச் சரியாக செய்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. தாமதித்தால் திட்டுவார். மற்றபடி நல்ல இயக்குநர். இவரை மாதிரிதான் நான் பணியாற்றிய மற்ற இயக்குநர்களும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பெஸ்ட்டாகத் தெரிவார்கள்.

பெண் காவலராக நடித்துள்ள மிக மிக அவசரம் படம் பற்றிக் கூறுங்கள்?
இதுவரையில் யாரும் கூறாத ஒரு விஷயத்தை இந்த படம் கூறும். அந்த படத்தின் கதை பற்றி இப்போதே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இது முழுக்க முழுக்கப் பெண் காவலர் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் படம். இதற்காகச் சில பெண் காவலர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். தங்களுடைய சந்தோஷம், துக்கம், அவசரம் என எந்த விதமான எமோஷனையும் யாரிடமும் ஷேர் செய்துகொள்ள முடியாத ஒரு நிலை உள்ளது. ஆனால் ஆண்கள் எளிதாகப் பேசிவிடலாம். பெண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தாலும் மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்கிற ஒரு விஷயம் இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையை யாரும் படமாக எடுக்காதபோது சுரேஷ் காமாட்சி சார் படமாக்குவது மகிச்சியாக இருக்கிறது. இந்தப் படம் ஒரு பெண் காவலர் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
விக்ரம், தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?
எப்படி இவ்வளவு பெரிய படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று பலர் நினைக்கிறார்கள். என்னுடைய புகைப்படத்தை முதலில் இயக்குநர் விஜய் சந்தர் சார் பார்த்துவிட்டு, என்னைத் தேர்வுசெய்தார். அதற்கு விக்ரம் சாரும் ஓகே சொல்லிவிட்டார். அதன் பிறகு அவர்கள் அலுவலகத்துக்குச் சென்று கதை கேட்டேன். படம் பற்றிய முழு விவரம் எதையும் நான் கேட்டுக்கொள்ளவில்லை. தமன்னா இருக்கும் வரையில் அவருடன் நீங்கள் ஸ்க்ரீன் ஷேர் செய்வீர்கள் என்று கூறினார்கள். நீங்கள்தான் செகன்ட் லீட் என்று சொன்னார்கள். அதனால் எப்படியாவது இந்தப் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்பதற்காக 'ஸ்கெட்ச்' போட்டு பிளான் பண்ணி வாய்ப்பைப் பெற்றேன்.
விக்ரமுடன் நடித்த அனுபவம்? அவரிடம் பெற்ற பாராட்டு?
அவர் ஒரு லெஜன்ட். அவர்கூட நடிக்கும்போது நல்ல அனுபவம் கிடைத்தது. அவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் நமக்குத் தெரியாத சில விஷயங்களைக் கற்றுத்தருவார். மிகவும் அக்கறையுடன் இந்தக் காட்சியில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். ஒரு காட்சியில் நான் நடித்தபோது விக்ரம் சார் என்னை அழைத்து “நீ அந்த சீன்ல நல்லா பண்ணியிருக்க, அதை மானிட்டரில் பாரு” என்று சொன்னார். அப்போதுதான் முதல் முறையாக நான் நடித்ததை மானிட்டரில் பார்த்தேன். அதற்கு முன்பு வரை என் காட்சிகளில் நடித்து முடித்த பிறகு நான் மானிட்டர் பக்கமே போக மாட்டேன். ஏனென்றால் டைரக்டர் ஒரு ஃபீல்ல இருப்பார் அதை நாம் கெடுக்கக் கூடாது என்பதற்காகத்தான். இயக்குநர்கள் ஏதாவது கரெக்ஷன் சொன்னால் அதற்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன். அந்த மாதிரி தான் இங்கேயும் இருந்தேன். அப்போது ஒரு காட்சியை ஒரே டேக்கில் நான் நடித்ததைப் பார்த்து விக்ரம் சார் பாராட்டினர். அந்தத் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பெண்களை மையமாக வைத்து வரும் படங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?
இதற்கு பதில் என்னிடம் இருக்குமா என்பது சந்தேகம்தான். அது நடிகைகள் கையில் இல்லை. இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. கதையை உருவாக்குபவர்கள் அவர்கள்தான். அவர்கள் என்ன உருவாக்குகிறார்களோ அதுதான் படமாக வரப்போகிறது. இப்போதைய சூழலில் நயன்தாரா மேடம் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்துவருகிறார். சில நல்ல படங்கள் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவருகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது விரைவில் ஒரு மாற்றம் வரும் என்று நம்புகிறேன்.

திரைத்துறையில் தற்போது அதிகமாக நடிகைகள் வைக்கும் குற்றச்சாட்டு 'அட்ஜஸ்மென்ட்'. இது பற்றி உங்களுடைய கருத்து ?
அந்த மாதிரியான டாக் எனக்கு வந்ததில்லை. இதற்கு அப்பறம் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. இதுவரை நான், என் அப்பா, அம்மாவுடன்தான் இணைந்து பயணிக்கிறேன். இதுவரையில் நான் பாதுகாப்பாக ஃபீல் பண்ணறேன். மற்றவர்களைப் பற்றி எனக்கு அந்த அளவுக்குத் தெரியாது.
சந்திப்பு: கபிஷ் பாலகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக